"மதம் மாறினால் பதவி உயர்வு!" நாசிக் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு கொடுமை.. அமைச்சர் ஆவேசம்!
மும்பை: நமது நாட்டில் பல்வேறு தரப்பினரும் வேலை செய்யும் ஒரு துறையாக ஐடி துறை இருக்கிறது. இதற்கிடையே ஐடி துறையில் பாலியல் சுரண்டல் கட்டாய மதமாற்றம் நடப்பதாகப் புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா அமைச்சர் இது தொடர்பாக சில பகீர் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஐடி நிறுவனங்களுக்குள் இப்படி ஒரு விபரீதமா என மகாராஷ்டிரா மாநிலத்தையே அதிர வைத்துள்ளது நாசிக் நகரில் நடந்துள்ள ஒரு சம்பவம். பாலியல் தொல்லை, கட்டாய மதமாற்றம் எனப் புகார்கள் தொடர்பாக 6 ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. இதனை 'கார்ப்பரேட் ஜிஹாத்' என மத்திய ஐடி துறை அமைச்சர் நிதேஷ் ரானே விமர்சித்துள்ளார்.

கார்ப்பரேட் ஜிஹாத்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் அந்தப் பெண்ணுக்கு நீண்ட நாட்களாகச் சக ஊழியர்கள் சிலர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்பட்டது.
பாலியல் சீண்டல்களுடன் நிற்காமல், அந்தப் பெண்ணைத் தங்களது மதத்திற்கு மாறுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். "மதம் மாறினால் பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்" என ஆசை காட்டியதோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் போலீசில் புகார் அளிக்க, நாசிக் போலீசார் உடனடியாகக் களத்தில் இறங்கினர்.
கைது
முதற்கட்ட விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவரவே, அந்த ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கார்ப்பரேட் ஜிகாத்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "லவ் ஜிஹாத் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், இப்போது ஐடி நிறுவனங்களுக்குள் 'கார்ப்பரேட் ஜிஹாத்' (Corporate Jihad) ஊடுருவியுள்ளது. இந்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, பின்னர் அவர்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்யத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது" என அதிர வைத்துள்ளார்.
போராட்டம் வெடிக்கும்
மேலும், அந்த ஐடி நிறுவனத்தின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்து சமூகத்தினர் ஒரு பிரச்சினை என்றால் யாருமே வருவதில்லை என்றும் குறிப்பிட்ட சில பிரிவினருடன் தொடர்புடைய வழக்குகளில் மட்டுமே இத்தகைய பெரிய கூட்டங்கள் திரள்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சினைகளை தான் எழுப்பும்போது, சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டுபவராகத் தன்னை குற்றஞ்சாட்டுவதாகவும் ரானே தெரிவித்தார். தற்போது, இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை காவல்துறை விசாரித்து வருகிறது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அரசியல் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications