காங்கிரஸுக்கு ஆதரவு: தேர்தல் வியூக வல்லுநர் யோகேந்திர யாதவ் மீது மகாராஷ்டிராவில் சரமாரி தாக்குதல்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றம்சாட்டி தேர்தல் வியூக வல்லுநரும் அரசியல் செயல்பாட்டாளருமான யோகேந்திர யாதவ் கடுமையாக தாக்கப்பட்டார். மகாராஷ்டிராவின் அகோலோ மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி அமைப்பினரால் யோகேந்திர யாதவ் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியை 150 தொகுதிகளில் ஆதரிப்பதாக ஏற்கனவே யோகேந்திர யாதவ் அறிவித்திருந்தார். மேலும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆலோசகராகவும் யோகேந்திர யாதவ் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் வியூக வல்லுநரான யோகேந்திர யாதவ், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்வைத்து விதர்பா பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பான Bharat Jodo Abhiyan இந்தப் பிரசார இயக்கத்தை நடத்தியது. அதேநேரத்தில் பாஜகவுக்கு எதிராகவும் இந்த கூட்டமைப்பு பிரசாரம் மேற்கொண்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலோ மாவட்டத்தில் யோகேந்திர யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. யோகேந்திர யாதவ் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே 40, 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென மேடையில் ஏறியது. யோகேந்திர யாதவிடம் இருந்த மைக்கை பறித்துக் கொண்ட அந்த கும்பல், அவரை தாக்கவும் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் யோகேந்திர யாதவை மீட்டு அங்கிருந்து வெளியேற்றினர்.
யோகேந்திர யாதவ், காங்கிரஸை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கூறி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி இயக்கத்தினரே யோகேந்திர யாதவ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பிரகாஷ் அம்பேத்கர் இதனை மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications