மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. மகாராஷ்டிராவில் பரவும் அந்த இரு ஓமிக்ரான் வகைகள்.. எந்தளவு ஆபத்து
மும்பை: கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சில புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனாவே இந்த 3ஆவது அலையை ஏற்படுத்தி இருந்தது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
2ஆம் அலை அளவுக்கு இந்த ஓமிக்ரான் கொரோனா 3ஆம் அலை இல்லை என்றாலும் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அதன் பின்னரே கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வந்தது.
மீண்டும் கொரோனா
சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்தச் சூழலில் ஓமிக்ரான் வைரசின் புதிய மாறுபாடுகள் பரவ தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்முறையாக 4 பேருக்கு புதிய வகை BA4 வகை ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி BA5 வகை ஓமிக்ரானும் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவிர பாதிப்பு இல்லை
இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா உட்பட உலகின் சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓமிக்ரானின் இந்த துணைப் பிரிவுகள் கண்டறியப்பட்டன. இவை இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இந்த ஓமிக்ரான் வகைகள் உறுதி செய்யப்பட்டது குறித்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்குப் பின்னரே அவர்களுக்கு புதிய வகை ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கு BA.4 வகை மற்றும் 3 பேருக்கு BA.5 வகை என மொத்தம் 7 பேருக்கு புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
யார் அவர்கள்
மேலும், அவர்களில் 4 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் 20-40 வயதுக்குட்பட்டவர்கள், ஒரு நோயாளி ஒன்பது வயதுக் குழந்தை. இவர்களில் 6 பேர் 2 டோஸ் வேக்சின் போட்டுள்ளனர். ஒருவர் பூஸ்டர் டோஸூம் போட்டுள்ளார். அந்த குழந்தைக்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் இருவர் தென்னாப்பிரிக்கா மற்றும் பெல்ஜியத்திற்கும், மூன்று பேர் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கும் சென்றுள்ளனர். மற்ற இருவர் சமீபத்தில் எங்கும் செல்லவில்லை" என்று தெரிவித்தார்.