மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக, மோடியின் இறுதி முடிவுக்கு ஆதரவு- ஏக்நாத் ஷிண்டே திடீர் அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பதவி தொடர்பான பாஜக மேலிடத்தின் இறுதி முடிவுக்கு தாம் கட்டுப்படுவதாகவும் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். தமக்கு முதல்வர் பதவிதான் வேண்டும் என அடம்பிடித்து வருகிறார் ஏக்நாத் ஷிண்டே. ஆனால் பாஜகவோ ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவியும் ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவியும் தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே திடீரென செய்தியாளர்களை சந்தித்து பாஜக மேலிடமே முடிவு செய்யட்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இன்று செய்தியாளர்களிடம் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டரை ஆண்டுகாலம் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். மகளிர் உதவித் தொகையால் பல கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணிக்காக ஒரு சாதாரண தொண்டரைப் போல பணியாற்றினோம். எப்போதும் நான் ஒரு முதல்வராக நினைத்துக் கொண்டதே இல்லை. ஒரு சாமானியனாகவே மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினோம்.
மகாராஷ்டிரா தேர்தலில் மக்கள் மிகப் பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று எனக்கு தொலைபேசியில் பேசினார். அப்போது, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என என்னிடம் கூறினார். அப்போது நான், இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது; அதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன். பாஜகவின் முடிவுக்கு சிவசேனா முழுமையான ஆதரவைத் தரும். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே கூறினார்.












Click it and Unblock the Notifications