அதிரடி! மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே உள்பட 54 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்! அடுத்த பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா இரண்டாக உடைந்துள்ள நிலையில் தகுதி நீக்கம் தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது அணியின் 40 எம்எல்ஏக்களுக்கும், உத்தவ் தாக்கரே அணியின் 14 எம்எல்ஏக்களுக்கும் மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டு நீடித்தது. கடந்த ஆண்டு சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு மகாராஷ்டிராவில் பாஜக -ஏக்நாத் ஷிண்டே அணியின் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர்.
இதற்கிடையே தான் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணி தான் எனக்கூறி வில் அம்பு சின்னம், சிவசேனாவின் பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது. முன்னதாக ஒருங்கிணைந்த சிவசோனவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நர்வேகாரிடம் கடிதம் வழங்கினார். அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தது. இந்த வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் தகுதி நீக்க நடவடிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகார் தொடங்கி உள்ளார். அதன்படி தகுதி நீக்கம் தொடர்பான விளக்கம் கேட்டு சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதன்படி முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, அவரது அணியின் 39 எம்எல்ஏக்கள் என 40 பேருக்கும், உத்தவ் தாக்கரே அணியின் 14 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு அடுத்த 7 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகார் கூறுகையில், ‛‛தகுதிநீக்கம் நடவடிக்கையின் தொடக்கமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்எல்ஏக்களுக்கும், உத்தவ் தாக்கரே அணியின் 14 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பபட்டுள்ளது'' என்றார். இதனால் எந்த அணியை சேர்ந்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கவுடன் பாஜக-ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 ஆக உடைந்துள்ளது. மேலும் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பு என இருவரும் தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என கூறி வரும் நிலையில் சிவசேனாவின் இரு அணிகளின் எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் வழங்கி இருப்பது மகாராஷ்டிரா அரசியலை இன்னும் பரபரப்பாகவே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications