ஸ்தம்பிக்கும் மும்பை.. மராத்தா இடஒதுக்கீடு கோரி படையெடுக்கும் மக்கள்.. மனோஜ் ஜாரங்கே உண்ணாவிரதம்
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி சமூக செயற்பாட்டாளராக இருக்கும் மனோஜ் ஜாரங்கே சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். மும்பை அசாத் மைதானத்தில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் அந்த மைதானத்தின் அருகே போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிராவை பொறுத்தவரை மராத்தா ஜாதியை சேர்ந்த மக்கள் இடஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மண்ணின் பூர்வகுடிகளான அவர்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 2018 ம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசு மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அந்த இடஒதுக்கீடு செயல்பாட்டில் இல்லை.
இருப்பினும் மராத்தா மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மனோஜ் ஜாரங்கே என்பவர் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மராத்தா ஜாதியினர் பற்றி நீதிபதி சுனில் சுக்ரி தலைமையிலான மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு நடத்திய அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து அப்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றினார். இருப்பினும் உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவால் மராத்தா மக்களுக்கான இடஒதுக்கீடு இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் மராத்தா சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை முன்னெடுக்கும் மனோஜ் ஜாரங்கே இன்று மும்பையில் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
மும்பையில் உள்ள ஆஜாத் மைதானத்தில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இது காலவரையற்ற உண்ணாவிரதமாகும். மனோஜ் ஜாரங்கேவுக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் அந்த மைதானத்தில் திரண்டு வருகின்றனர். இதனால் மும்பை திணறி வருகிறது. மைதானத்தை சுற்றிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி மனோஜ் ஜாரங்கே கூறுகையில், ‛‛மராத்தா இடஒதுக்கீட்டுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த முறை இடஒதுக்கீட்டை பெறாமல் மும்பையில் இருந்து செல்லமாட்டேன். அவர்கள் என்னை துப்பாக்கியால் சுடவோ அல்லது ஜெயிலில் வைத்தாலும் கவலையில்லை. எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை நான் மும்பையை விட்டு செல்லமாட்டேன்'' என்று கூறியுள்ளார்.
மனோஜ் ஜாரங்கேவின் உண்ணாவிரதத்துக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கி உள்ளனர். அதன்பிறகு கலைந்து செல்ல வேண்டும் ஆனால் மனோஜ் ஜாரங்கே இடஒதுக்கீடு கிடைக்கும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஆஜாத் மைதானத்தில் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications