கலங்கிப் போன ராஜ் தாக்கரே.. கை கொடுத்த கல்யாண்.. ஒரே ஒரு ஆறுதல் வெற்றி!
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
Recommended Video
மும்பை: ராஜ் தாக்கரேவுக்கு மீண்டும் ஒரு பெரும் தோல்வியை மகாராஷ்டிர மக்கள் பரிசளித்துள்ளனர். ஒரு இடத்தில் மட்டுமே அவரது கட்சி வென்றுள்ளது.
ஒரு காலத்தில் சிவசேனாவின் வருங்காலம், பால் தாக்கரேவின் ஒரிஜினல் வாரிசு என்று பாராட்டப்பட்டவர், அப்படி பார்க்கப்பட்டவர் ராஜ் தாக்கரே.
ஆனால் ஒரிஜினல் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே இன்று அடைந்திருக்கும் உயரத்தையும், ராஜ் தாக்கரே வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தையும் பார்த்தால் காலத்தை நினைத்து ஆச்சரியம்தான் வருகிறது.

பேச்சாளர்
உண்மையிலேயே உத்தவ் தாக்கரேவை விட பல நல்ல அம்சங்கள் ராஜ் தாக்கரேவிடம் உள்ளன. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தால் உத்தவை விட ராஜிடம்தான் அதற்கான அம்சங்கள் நிறைய உள்ளன. ராஜ் தாக்கரே நல்ல பேச்சாளர். வழவழா கொழ கொழா இருக்காது. அழகாக பேசுவார். அவரது பேச்சைக் கேட்க அப்படி கூட்டம் கூடும். இது உத்தவ்விடம் இல்லை.

திறமை
தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் ராஜ் தாக்கரே திறமையானவர். அவர் சொன்னால் கேட்பார்கள். அவரை மீறி நடக்க மாட்டார்கள். கட்சியையும் கூட அப்படித்தான் சிறப்பாக வைத்துள்ளார் ராஜ் தாக்கரே. ஆனால் மக்களைக் கவரத் தவறி விட்டார். அங்குதான் உத்தவ் ஜெயித்துள்ளார்.

சிவசேனா
அவர் பாஜகவுடன் அமைத்த கூட்டணி சிவசேனாவையும் சரி, அவரையும் சரி, சரியாக காப்பாற்றி விட்டது. அவ்வப்போது தாறுமாறாக திட்டுவது. பின்னர் தேவைப்படும் நேரத்தில் போய் கூட்டணியில் இணைந்து கொள்வது என உத்தவ் செய்து வரும் அரசியல் ரொம்பவே வித்தியாசமானது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக அரசியலில் பிழைப்பது எப்படி என்பது மட்டுமே அவரது கவலையாக உள்ளது.

பரிதாபம்
ஆனால் ராஜ் தாக்கரே பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கடுமையான பிரச்சாரத்திலும் கூட ஈடுபட்டார். இந்த தேர்தலில் அவரது கட்சி 110 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் மிகப் பரிதாபமாக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அது கல்யாண் ரூரல் தொகுதி. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரமோத் ராஜு ரத்தன் பாட்டீல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் வீழ்த்தியது சிவசேனா வேட்பாளர் ரமேஷ் சுக்ரியா மாத்ரே என்பவரை.

வாரிசு
2009ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது ராஜ் தாக்கரே கட்சி. முதல் தேர்தலில் 13 இடங்களை வென்றது. அடுத்த தேர்தலில் 1 சீட் கிடைத்தது. இப்போது மீண்டும் ஒரு சீட் மட்டுமே கிடைத்துள்ளது. பால் தாக்கரேவின் ஒரே வாரிசு நான்தான் என்று கூறி வந்தார் ராஜ் தாக்கரே.. ஆனால் இன்று ஒரு சீட் கட்சியாக அது மாறியிருப்பது ஆச்சரியம்தான்.. உண்மையில் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக மக்கள் ஒரு விரல் புரட்சி செய்து விட்டனரோ என்றுதான் நமக்கு யோசிக்க தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications