"வெப்ப அலை.." அப்படியே சரிந்த மக்கள்.. மகாராஷ்டிராவில் அமித் ஷா பங்கேற்ற விழாவில் 11 பேர் பலி! ஷாக்
மும்பை: மகாராஷ்டிர பூஷண் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எப்போதும் மே மாதம் வெயில் உச்சம் தொடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதற்கு மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே வெப்பம் அதிகரித்துவிடுகிறது.
அதிலும் இந்தாண்டு பிப். மாதமே சில இடங்களில் வெப்பம் சதமடித்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்பம்: மேலும், வட மாநிலங்களில் இப்போதே சில இடங்களில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர பூஷண் விருது வழங்கும் விழாவில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் திறந்த வெளியிலேயே அமர வைக்கப்பட்டனர்.
இதனிடையே விழாவில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களையும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மகாராஷ்டிர அரசு விழா: மகாராஷ்டிரா அரசால் வழங்கப்படும் இந்த விருதை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு வழங்கினார். நவி மும்பையில் நடந்த இந்த நிகழ்வில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நவி மும்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வெப்பம் 100டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. இதில் மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் ஃபட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நவி மும்பையில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆயிரம் பேர் குவிந்தனர். காலை 11.30 மணிக்குத் தொடங்கிய இந்த விழா மதியம் 1 மணி வரை நடந்தது. மைதானம் மக்களால் நிரம்பியிருந்த நிலையில், இதை அங்கு இருந்த அனைவரும் காணும் வகையில் வீடியோ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திறந்த வெளியில் நடந்த இந்த விழாவில் மக்களுக்கு நிழல் தரும் வகையில் மேலே பந்தல் எதுவும் அமைக்கப்படவில்லை.
சரிந்த மக்கள்: இதனால் கடும் வெப்பம் காரணமாக அங்கே இருந்த மக்கள் வரிசையாகச் சரிந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில், அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், 11 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள ஷிண்டே , உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்
அவர் இது குறித்துக் கூறுகையில், "சிலர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் முதற்கட்ட சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்" என்றார். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர் பட்னாவீஸ், இதனால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்றார்.
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications