முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன் அனுமன் சாலிசா பாட முயன்ற எம்பி நவ்நீத் ராணா கைது!
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் சாலிசா பாட போவதாக அறிவித்த அந்த மாநில எம்பியும் நடிகையுமான நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் காவல் துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியின் எம்பியாக இருப்பவர் நவ்நீத் ராணா. நடிகையான இவர் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கணவர் ரவி ராணா , பத்ரேனா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். நவ்நீதும் ரவி ராணாவும் சுயேச்சை உறுப்பினர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர்.

மகாராஷ்டிரா
இந்தநிலையில் மகாராஷ்டிராவை ஆளும் சிவ சேனா கட்சியுடன் மோதல் போக்கில் இருந்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்க முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அனுமன் சாலிசா பாடலை படிக்க வேண்டும் என எம்எல்ஏ ராணா கோரிக்கை வைத்திருந்தார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே
இதை முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்காத நிலையில் முதல்வரின் இல்லமான மும்பையில் உள்ள மத்தோஸ்ரீ முன்பாக எம்எல்ஏ ராணாவும் அவரது மனைவியான எம்பி நவ்நீத்தும் நேற்று அனுமன் சாலிசா பாடப் போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவாளர்கள்
இந்த நிலையில் இவர்களுடைய ஆதரவாளர்கள் சிலர் இன்று காலை முதல்வர் உத்தரவ் தாக்கரே வீட்டு முன்பு அனுமன் சாலிசா பாட தொடங்கினர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் சிவசேனா தொண்டர்கள் அனுமன் சாலிசா பாடியோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நவ்நீத் ராணா
மேலும் நவ்நீத் ராணாவும் ரவி ராணாவும் முதல்வர் வீட்டு முன்பு அனுமன் சாலிசா பாடவிருப்பதை அறிந்த சிவசேனா தொண்டர்கள் அவர்களுடைய வீட்டு முன்பு முற்றுகையிட்டு ராணா தம்பதியினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி முற்றுகையிட்டனர். பேரிகாடுகளை அகற்றி சிவசேனா தொண்டர்கள் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தனர்.

பிரதமர் மோடி மகாராஷ்டிரம் வருகை
பின்னர் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்எல்ஏ ரவி ராணா கூறுகையில் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவீஸ் எங்களை தொடர்பு கொண்டு மறைந்த லதா மங்கேஷ்கரின் விருது பெற பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா வரவுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்க வேண்டும். எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெற வேண்டாம் என பட்னவீஸ் கேட்டுக் கொண்டார். அதனால்தான் முதல்வர் வீட்டு முன் அனுமன் சாலிசா பாடும் திட்டத்தை நானும் நவ்நீத்தும் கைவிட்டோம் என்றார்.

ராணா தம்பதி கைது
எனினும் ராணா தம்பதி நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பொது அமைதியை குலைக்கும் நோக்கில் செயல்படுவதாக சட்டப்பிரிவு 153 ஏ கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவீஸ் கூறுகையில் , அவர்களை முதல்வர் வீட்டருகே அனுமதி கொடுத்திருந்தால், அனுமன் சாலிசாவை பாடிவிட்டு திரும்பியிருப்பர். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குழந்தைத்தனமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications