கொரோனாவால் மும்பையில் காவலர் ஒருவர் உயிரிழப்பு... 96 போலீஸார் கொரோனாவால் பாதிப்பு
மும்பை: மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மும்பை வகோலா பகுதியை சேர்ந்த காவலர் சந்திரகாந்த் பெண்டுர்கர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிகழ்வு மாஹாராஷ்டிரா காவல்துறையினருக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 57 வயதே ஆன சந்திரகாந்த் பெண்டுர்கர் வகோலா காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 96 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 15 பேர் காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள். 81 பேர் காவலர்களாக இருப்பவர்கள். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா. அங்கு கொரோனா காற்றை விட வேகமாக பரவிவருவதால் அதனை தடுப்பதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதேபோல் டெல்லியில் 21 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று களமாடும் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரையும் கொரோனா பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இதனால் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.












Click it and Unblock the Notifications