மும்பை டாக்டர் பாயல் தற்கொலை வழக்கு: சாதியை சொல்லி சாகடித்த 3 டாக்டர்கள் கைது
மும்பை: சாதியை சொல்லி ராக்கிங் செய்த சீனியர்களால் மனஉளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவி பாயல் தாத்வி தனது அறையில் கடந்த 22ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தேடப்பட்டு வந்த மூன்று சீனியர் மாணவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் மகாராஷ்டிரா மருத்துவர்கள் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது.
மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாயல் தாத்வி, 26 வயதாகும் அந்த இளம்பெண் ஆதிவாசி பழங்குடியின சமூகத்தில் இருந்து முதல்முறையாக எம்பிபிஎஸ் முடித்து டாக்டரானார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு மருத்துவப்பிரிவில் முதுகலைப்பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். பிஒய்எல் நாயர் மருத்துவமனையுடன் இணைந்து இக்கல்லூரி செயல்பட்டு வந்தது.
அதே கல்லூரியில் படித்து வந்த சீனியர் மாணவர்கள் ஹேமா ஆஹூஜா, பக்தி மெஹ்ரே, அங்கீதா ஆகியோர் பாயலை ராகிங் செய்து வந்தனர். பாயல் தத்வியைப் பற்றி வாட்ஸ்அப் குழுவில் கிண்டலான பதிவுகளை போடுவதோடு ஜாதியையும் குறிப்பிட்டு கிண்டல் செய்வார்களாம். இட ஒதுக்கீட்டில் படிக்க வந்தவள்தானே என்றும் பேசி மனதை காயப்படுத்தியுள்ளனர். சீனியர்கள் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

பாயல் தற்கொலை
சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து முதன்முறையாக டாக்டர் பட்டம் பெற்றும் பயணில்லாமல் போய்விட்டது. மனதளவில் காயம்பட்ட அந்த இளம் பெண் தனது அறையில் கடந்த 22ஆம் தேதி தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போனார். நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் பிஸியாக இருந்ததால் இந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புகார் அளித்தும் பயனில்லை
மகப்பேறு மருத்துவ பிரிவில் பயிற்சியின் போது உள்ளே செல்லவும் அனுமதிக்காமல் வார்த்தைகளினால் குத்தி கிழித்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும் பயனில்லை. அவர்கள் விசாரணை நடத்தியதாக தெரியவில்லை. மகளின் மரணம் பெற்றோர்களை கடுமையாக பாதித்துள்ளது. நாங்கள் புகார் கொடுத்தபோதே விசாரணை நடத்தியிருந்தால் எங்களின் மகள் உயிருடனாவது இருந்திருப்பாள். எங்கள் சமூகத்தின் முதல் டாக்டர் அவள்தான். எங்கள் குடும்பத்தின் முதல் மருத்துவர் என்று கண்ணீருடன் கூறினார்.

தலைமறைவான மாணவிகள்
பாயலின் மரணத்திற்கு காரணமானவர்களாக குற்றம் சாட்டப்படும் மாணவிகள் ஹேமா ஆஹூஜா, பக்தி மெஹ்ரே, அங்கீதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். பாயலின் மரணம் குறித்து சமூகவலைத்தளங்களில் கடுமையாக பேசப்பட்டது. பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறினர். பாயல்தாத்விக்காக #JusticeForDrPayal என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி பலரும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டனர். போராட்டங்களும் நடைபெற்றன. மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலின் கணவரும், பெற்றோரும் கூறியுள்ளனர்.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்
இந்த தற்கொலை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது. தேசிய மகளிர் ஆணையர் ரேகா சர்மா, இது குறித்து மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர் அவினாஷ் சுபேவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல மாநில மகளிர் ஆணையமும் கல்லூரி டீனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மாணவிகள் கைது
இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவிகள் ஹேமா ஆஹூஜா, பக்தி மெஹ்ரே, அங்கீதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ராகிங் தற்கொலை வழக்காக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு சாதிய வன்கொடுமை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய மூன்று மாணவிகளையும் மகாராஷ்டிரா மருத்துவர்கள் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது. மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலின் கணவரும், பெற்றோரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications