மூளையோ மூளை.. ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ. 8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்.. எப்படி தெரியுமா?
மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவை ஓட்டாமலேயே புத்திசாலித்தனமாக சிந்தித்து மாதம்தோறும் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை சம்பாதித்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவன் தொழிலோ, வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் பணம் மட்டுமே மூலதனமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவனிடம் என்ன திறன் அதிகமாக இருக்கிறதோ அதனை முதலீடாக வைத்தே கோடிக்கணக்கில் பணம் ஈட்டலாம் என்று ஒவ்வொரு பொருளாதார நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை ஓட்டாமலேயே மாதம்தோறும் லட்சங்களில் சம்பாதித்து அசத்தி வருகிறார். பட்டப்படிப்புக் கூட படிக்காமல் லட்சங்களில் சம்பாதிக்கும் அவருடைய இந்த திறமையை நெட்டிசன்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபானி தனது லிங்க்டுஇன் பக்கத்தில் கூறியுள்ளதாவது: விசா விண்ணப்பிப்பதற்காக அமெரிக்க தூதரகத்துக்கு இந்த வாரம் சென்றிருந்தேன். அப்போது, அங்கு எனது பையை அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
பையை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வந்து உங்கள் பையை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன். ஆனால், பையை பார்த்துக் கொள்வதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று கூறினார். முதலில் அவரிடம் கொடுக்க எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அலுவலகத்துக்குள் செல்ல வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன்.
அதன் பிறகு யோசித்த போதுதான் இது அருமையான வியாபாரம் என்பது. இந்த பிசினஸ் மூலமாக அந்த ஆட்டோ ஓட்டுநர் தினந்தோறும் சுமார் 30 பேரின் உடைமைகளை பாதுகாப்பாக தனது ஆட்டோவில் வைத்துக் கொள்கிறார். இதன் மூலம் அவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
அந்த ஓட்டுநர் ஆட்டோ ஓட்டாமலேயே ஆட்டோவை வைத்து நன்றாக சம்பாதிக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஒரு சில சமயம் அதிகளவிலான பைகளை பாதுகாக்க வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக காவல் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தமும் செய்துள்ளார். அவர் பைகளை பாதுகாப்பாக வைத்து திரும்பக் கொடுக்கிறார்.
அதிகாரியின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். புத்திசாலித்தானமாக யோசித்து லட்சங்களில் சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications