தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கல்! புரட்டி எடுத்த கனமழை.. மும்பை-புனே இடையே ரயில் சேவை பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால், மும்பை-புனே இடையேயான ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
கர்ஜத் - லோனாவாலா மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மும்பை - புனே இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் இந்திராயணி எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பை, பால்கர், ராய்காட் மற்றும் நாசிக் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், புனே மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மும்பையில் அடுத்த சில மணிநேரங்களுக்கு மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விபத்து மற்றும் உயிரிழப்பு
மும்பையின் மான்குர்த் பகுதியில் கனமழை காரணமாக மூன்று அடுக்கு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது தவிர, மும்பை - புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளப் பணிகள் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டன. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது அருகிலுள்ள நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
பிற மாநிலங்களின் நிலை
மகாராஷ்டிரா மட்டுமின்றி கேரளா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications