மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பாசிட்டிவ் ரிப்ளை! பெண்கள் குஷி!
விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 நிச்சயம் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதிப்பட தெரிவித்தார். ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பெண்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததும் ஒரு அம்மா என்னிடம் ரூ 2500 மகளிர் உரிமைத் தொகை குறித்து கேட்டார்.

இப்போதைக்கு பழைய அரசு கொடுத்து வந்த ரூ 1000 தொடர்ந்து கொடுத்து கொண்டுதான் வருகிறோம். நிதிநிலை மோசமாக இருந்த போதிலும் அந்த ரூ 1000-த்தை நிறுத்தாமல் கொடுத்து வருகிறோம்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதியாக ரூ 2500 பணம் கொடுப்பது குறித்து வழிமுறைகளை முதல்வர் உள்பட எல்லோருமே ஆய்வு செய்து வருகிறோம். கொஞ்சம் நேரம் எடுக்கும். கண்டிப்பாக சொன்னது போல் ரூ 2500 கொடுப்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தொகையை உயர்த்துவதற்கான பணிகள் தற்போது பரிசீலனையில் உள்ளதால் அதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும். இவ்வாறு ஜெகதீஸ்வரி கூறியதும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
தமிழகத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு உரிமைத் தொகை என்ற திட்டம் குறித்து முதலில் பேசியவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அவர்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது இதை வாக்குறுதியாக தெரிவித்தார்.
அதன்பிறகு திமுகவும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிட்டு ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. திமுக அளித்த வாக்குறுதிகளின்படி அந்த சட்டசபை தேர்தலில் வென்ற போதிலும் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகையை உடனே கொண்டு வரவில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. அதிலும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்திற்கு பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்துடன் தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டம் உள்ளிட்டவையும் திமுக அரசால் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலையொட்டி திமுக அளித்த வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை ரூ 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
அது போல் அதிமுகவோ மகளிர் உரிமைத் தொகை ரூ.2000-ஆக உயர்த்தப்படும் என்றும் தவெகவோ ரூ 2500 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து கடந்த மே மாதம் பதவியேற்றதுமே மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ 1000 மட்டுமே வழங்கியது. அடுத்து ஜூன் மாதத்திலாவது அந்த தொகை உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். ஆனாலும் இந்த திட்டம் ரூ 1000 என்ற எண்ணிக்கையிலேயே தொடர்ந்து வருகிறது. இதனால் சொன்னதை செய்யாத தவெக என விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதனிடையே தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications