விசிக உறவை உடைத்தது திமுக.. தவெக கூட்டணியில் இணைவோம்.. திருமாவளவன் அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளே திமுக கூட்டணியில் உள்ளன. கூட்டணியில் இருந்த கட்சிகள் மீது உதயநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள். கூட்டணியை முறித்தது திமுக தான். தவெக கூட்டணி உருவானால் அதில் விசிக இணையும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், "பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக தவெக உள்ளது. நாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டதால் அதில் மகிழ்ச்சி இல்லை தான். நாங்கள் தவெகவை விமர்சித்துள்ளோம். எப்படி நம்மால் பதவிக்காக உடனே ஒட்டிக் கொள்வோம். பதவிக்காக எப்படி கட்டி உருள முடியும். ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் என்று விமர்சித்துவிட்டு, உங்களுக்கு ஆதரவு தருகிறோம். எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்கள் என்று எப்படி பேச முடியும்.

5 ஆண்டுகள் உங்களின் ஆட்சி
நாங்கள் எங்களுக்கு இருந்த சந்தேகத்தை தான் பேசினோம். எங்களுக்கு உங்கள் மீது தேர்தலுக்கு முன்பிருந்த சந்தேகம் இது. ஆனால் நீங்கள் எடுத்த முடிவு எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் நினைத்திருந்தால் அதிமுகவின் ஆதரவை பெற்ற உடனே ஆட்சியை அமைத்திருக்க முடியும். இல்லையென்றால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால் மதச்சார்பற்ற சக்திகளான எங்களை அழைத்து ஆதரவு கேட்டது துணிச்சலான முடிவு.
எனவே உங்களை அங்கீகரிக்க வேண்டியது எங்களின் பொறுப்பு. மதச்சார்பின்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பது ஆறுதல் அளிக்கிறது. உறுதியாக இருப்போம். என்றைக்கும் தோழமையுடன் இருப்போம். 5 ஆண்டுகள் உங்கள் ஆட்சி தொடரும். அதற்கு நாங்கள் துணையிருப்போம் என்று முதலமைச்சரிடம் நான் நேரடியாக கூறினேன். இதில் என்ன துரோகம் இருக்கிறது சொல்லுங்கள்.
தவெக கூட்டணியில் விசிக
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதே திமுகவே அறிவித்துவிட்டது. இதுவரை நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமா என்பதையும் நான் சொல்லவில்லை. தவெக அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. அதில் நாங்கள் கலந்து கொண்டோம். அதைப்பற்றி இன்னும் எந்த முடிவும் அங்கே எடுக்கப்படவில்லை.
ஒருவேளை அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதில் இடம்பெறுவோம். அதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விசிகவில் இருந்து ஒருவரை அழைத்து தங்களின் கட்சியில் சேர்த்துள்ளனர். இதன்மூலம் விசிகவுடன் எங்களுக்கு உறவில்லை திமுக தலைமையே சொல்லிவிட்டது. நானா சொன்னேன். விசிகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.
பாஜகவுக்கும் மரியாதை
அவர் என் மதிப்பிற்குரியவர். அவர் மீதான மதிப்பு என்றைக்கும் குறையாது. அது வேறு. பாஜகவில் இருக்கின்ற தலைவர்களுக்கே மிகுந்த மரியாதை கொடுப்பவன் திருமாவளவன். அவர்கள் கொள்கை, அவர்கள் அரசியல் நமக்கு பகை. அவ்வளவுதான். தனிப்பட்ட பகை எதுவுமில்லை. அக்கா தமிழிசை சௌந்தரராஜன் எங்கே வந்தாலும் தேடி சென்று வணக்கம் வைப்பவன் நான். அண்ணன் பொன் ராதாகிருஷ்ணனை வழியில் பார்த்தாலும் ஓடிசென்று கைக்குலுக்குபவன் திருமாவளவன்" என்றார்.












Click it and Unblock the Notifications