உதயநிதி பேசியது வரலாற்று பிழை.. இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. வீரபாண்டியன் பதிலடி
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளே திமுக கூட்டணியில் உள்ளன. கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்துவிட்டன. இதனால் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். சோஃபா செட்டை பார்த்து கூட்டணி கட்சிகள் தவெக சென்றுவிட்டனர் என்று உதயநிதி கூறியிருந்தார். உதயநிதியின் கருத்து வரலாற்று பிழை என்று வீரபாண்டியன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
சென்னையில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக ஆட்சியமைப்பதன் பின்னணியில் கல்லா பெட்டியும் இல்லை, சோஃபாவும் இல்லை. ஜனநாயகத்தை காப்பதற்காக அரசியல் ரீதியாக இந்த முடிவை எடுத்தோம். மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக்கூடாது, குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிட கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. முழுக்க முழுக்க ஜனநாயகத்தை பொருட்டு அமைப்பு ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு இது.

அதெல்லாம் செல்லவாது
இந்த முடிவு அரசியலாக தான் பார்க்க வேண்டும். இதை சோஃபா செட், பெட்டி என்று சொல்வது பொருத்தமற்ற விவாதம். அவர்களின் விமர்சனம் எடுபடாது. அதற்குரியவர்கள் நாங்கள் இல்லை. வரலாற்றில் எங்கும் அதற்கு சான்றுகள் உள்ளன. சமூக மாற்றத்திற்காக விசிக போராடுகிறது. பல்வேறு அறிஞர்கள், சான்றோர்களுக்கு விருது வழங்கியுள்ளனர். நான் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதாரண கடைநிலை ஊழினாக இருக்கிறேன்.
தொண்டு, தியாகம், கல்வி, அறிவு ஆகியவற்றுடன் பார்க்கும் போது நான் மிகவும் கடைநிலை ஊழியன் தான். ஆனாலும் கூட சமூக பொறுப்புடன் களமாடுகிறோம். எளிய மக்களுடன் இருப்பதற்காக வழங்கப்பட்ட விருதுக்கு நன்றி. முதலமைச்சர் வருகிற 10 ஆம் தேதி கரூர் செல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு வேலை தருவது தவறில்லை. யாராக இருந்தாலும் உடல் மொழி உள்பட அரசியல் கருத்துகள், அரசியல் விழுமியங்கள் இருக்க வேண்டும்.
உதயநிதி பேசிய பிழை
தமிழ் மொழி நம் முன்னோர் வழங்கிய கொடை. அதை சிதைத்துவிட கூடாது. அதுதான் எங்களின் நிலைப்பாடு. உதயநிதி பேசியது வரலாற்று அரசியல் பிழை. எதிர்க்கட்சி தலைவர் அவ்வாறு பேசுவது சரியல்ல. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், நிர்வாகிகள் கூட முடிவு செய்வோம். அதுகுறித்து ஊடகங்களை அழைத்து அறிவிப்பு வெளியிடுவோம்" என்றார். வீரபாண்டியனின் பதிலுக்கு திமுகவினர் சமூகவலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications