அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு.. 3 நாட்களில் 3 நீதிபதிகள் விலகல்
Recommended Video

மும்பை: நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மும்பை உயர் நீதிமன்ற கிளையின், மூன்று நீதிபதிகள் திடீரென அதிலிருந்து விலகிவிட்டனர்.
குஜராத்தில் நடைபெற்ற, சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014ம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நாக்பூர் சென்ற போது திடீரென மரணமடைந்தார்.
நாக்பூர் நகரில் உள்ள ராஜ்பவன் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த லோயா, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மாரடைப்பு
திடீரென நெஞ்சுவலி எனக் கூறியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் லோயா. ஆனால் அவர் மரணம் அடைந்தார். லோயா மரணத்திற்கு மாரடைப்புத்தான் காரணம் என்று கூறப்பட்டது.

மர்மம்
பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் திடீர் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

2 நீதிபதிகள்
நீதிபதி லோயா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை நீதிபதிகள் சுக்ரே, மோதக் முன்னிலையில் விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், இருவருமே வழக்கில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

3வது நீதிபதி
இதையடுத்து புதன்கிழமை, இவ்வழக்கு நீதிபதிகள் பி.என்.தேஷ்முக் மற்றும் மற்றும் ஸ்வப்னா ஜோஷி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்வப்னா ஜோஷி வழக்கிலிருந்து விடுவித்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம், 3 நாட்களுக்குள் 3 நீதிபதிகள் இவ்வழக்கில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications