என்னாது மோடி 88லேயே மெயில் அனுப்பினாரா.. இன்டர்நெட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிரிப்பு!
மும்பை: 1988ம் ஆண்டில், நரேந்திர மோடியால் இமெயில் பயன்படுத்தி இருக்க முடியாது என்று சொல்கிறார், இணையதளத்தை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த பி.கே.சிங்கால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, 1987 அல்லது 1988ஆம் ஆண்டில் இந்தியாவில் சிலரிடம் மட்டும் இமெயில் சேவை இருந்ததாகவும், அப்போது, தான் டிஜிட்டல் கேமராவில் எடுத்த அத்வானியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தொடர்பான புகைப்படத்தை, இமெயிலில் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த பேச்சு கடுமையான கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளானது. ஏனெனில் 1995ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் வர்த்தக தேவைகளுக்காக இணையதள சேவை, பயன்பாடு அறிமுகத்துக்கு வந்தது. ஆனால் நரேந்திர மோடி குறிப்பிட்ட ஆண்டில் இந்தியாவில் இமெயில் சேவை இல்லாதது அதுமட்டுமின்றி, டிஜிட்டல் கேமராக்கள் அப்போது அமெரிக்காவில் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

இணையதள சேவை
இதனிடையே, இந்தியாவுக்கு இணையதள சேவையை அறிமுகம் செய்த விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (VSNL) முன்னாள் தலைவர் வி.கே.சிங்கால், இதற்கு ஆதாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், 1995ம் ஆண்டு முன்பாக இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் சிலவற்றில் மட்டுமே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. 1980களில் நரேந்திர மோடி கண்டிப்பாக இமெயில் பயன்படுத்தி இருக்க முடியாது. அதுவும் புகைப்படங்களை அனுப்புவது என்பது இயலாத காரியம் என்று அவர் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஎஸ்என்எல் தலைவர்
மேலும், 1986ம் ஆண்டு, தான் லண்டனில் இருந்தபோது, இணையதள சேவை பயன்பாட்டுக்கான கட்டணம் என்பது மிக மிக அதிகமாக இருந்தது என்றும், மிகப் பெரும்பான்மையான மக்கள் அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். 1991 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததாக குறிப்பிடும் சிங்கால், விதேஷ் சஞ்சார் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனாக பதவியேற்றுள்ளார்.

சென்னையில் அறிமுகம்
1993 ஆம் ஆண்டு முதல், இந்திய அரசு நாடு முழுமைக்கும் இணையதள சேவையை பரவலாக வழங்குவதற்கு வலியுறுத்தியதையும், 1995ஆம் ஆண்டு மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய நகரங்களில் விஎஸ்என்எல் 5 ஸ்டேஷன்களை நிறுவியதாகவும் குறிப்பிடுகிறார் சிங்கால். பெங்களூரில் இதுபோன்ற ஸ்டேஷன் அமைக்கப்படவில்லை என்பது அப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது, இருப்பினும் அந்த நேரத்தில் அங்கு இணையதள சேவையை கொடுக்க முடியவில்லை என்று கூறும், சிங்கால், 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் இணையதள சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் இணையதள சேவை கட்டணம்
கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் சேர்த்து அனுப்புவதற்கு அப்போது மாத கட்டணமாக 25,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது (அம்மாடியோவ்...). தனிப்பட்ட நபர்களுக்கான மாதாந்திர கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெறுமனே எழுத்துக்களை மட்டும் அனுப்புவதற்கான வசதி கொண்ட இணையதள சேவை மாதம் 5,000 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் எத்தனை வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற்றனர் என்பதை தற்போது நினைவுகூர முடியவில்லை என்கிறார், சிங்கால்.

முதல் போட்டோ 1997
அந்த காலகட்டத்தில் ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆசிய நாடுகளிலேயே இணையதள சேவையை வர்த்தக பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்திய மூன்றாவது நாடு இந்தியாதான். நான் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது பேரன் போட்டோவை இணையதளம் மூலம் கிடைக்கப் பெற்றேன். இது தான் எனக்கு வந்த முதல் புகைப்படம் என்று புன்னகையுடன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார், சிங்கால்.












Click it and Unblock the Notifications