மும்பை சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி.. போதை பொருட்களை வாங்க பிட்காயினை பயன்படுத்திய கும்பல்?
மும்பை: மும்பை சொகுசு கப்பலில் கைப்பற்றப்பட்ட போதை பொருள்கள் பிட்காயின் மூலம் வாங்கப்பட்டிருக்கலாம் என போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கிறார்கள்.
மும்பை கடலோரத்தில் கோவாவைச் சேர்ந்த சொகுசு கப்பலில் போதை பொருள்கள் விநியோகம், ஆபாச நடனத்துடன் கூடிய ரேவ் பார்ட்டி நடப்பதாக போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பயணிகள் போல் கப்பலில் சென்ற அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி போதை பொருள்களை வைத்திருந்ததாக சிலரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கானும் ஒருவர் ஆவார்.

போதை பொருட்கள்
இந்த கப்பலில் இருந்து கோகைன், ஷாஷிஷ் உள்ளிட்ட போதை பொருட்களை போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஆர்யான் கான் நேற்றைய தினம் மும்பை நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர் போதை பொருள் தடுப்பு பிரிவினரின் காவலில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ரேவ் பார்ட்டி
இந்த நிலையில் ஆர்யான் கானை அந்த ரேவ் பார்ட்டிக்கு அழைத்தது யார், அவருடன் பிடிபட்ட நண்பர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களை யார் வாங்கிக் கொடுத்தது? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண போதை பொருள் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டு வருகிறார்கள்.

போதை பொருள் தடுப்பு பிரிவு
அது போல் விழா ஏற்பாட்டாளர்கள் மீதும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஒரு கண் வைத்துள்ளார்கள். ஏனெனில் கப்பலில் சனிக்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போதிலும் கப்பலை கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்றனர். கப்பலில் ஏறிய பயணி ஒருவர் போதை பொருளை உட்கொண்டு விட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

கப்பலின் ஜன்னல்கள் உடைப்பு
அந்த நபர் கப்பலின் ஜன்னல்களை உடைத்ததாகவும் புகார் எழுந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த போதை பொருட்களை வாங்குவதற்காக இவர்கள் பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தியிருக்கலாம் என போதை தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications