எங்களுக்குதான் பெரும்பான்மை.. ஆளுநர் முன்பு எம்எல்ஏக்கள் அணிவகுப்பு.. சரத் பவார் அதிரடி திட்டம்
மும்பை: தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது எம்எல்ஏக்களை மகாராஷ்டிர ஆளுநர் முன்பாக அணிவகுப்பு நடத்த செய்து, தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது என்பதை காட்ட முடிவு செய்துள்ளன.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அதிகாலை திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டு, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு தாக்கல் செய்ய தாக்கல் செய்துள்ளது.
மற்றொரு பக்கம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இணைந்து 24 மணி நேரத்துக்குள் சட்டசபையில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளன.
இந்த நிலையில் சரத்பவார் தலைமையில் மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சுமார் 50 எம்எல்ஏக்ள் பங்கேற்றதாகவும், எனவே ஒரு சிலர் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
24 மணி நேரத்திற்குள் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு
மற்றொரு பக்கம் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்தினார். அனைவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சரத்பவார், உத்தவ் தாக்கரேவை, தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைத்தும் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள சரத் பவார், இந்த மூன்று கட்சி எம்எல்ஏக்களும் இணைந்து ஆளுநர் முன்பாக அணிவகுப்பு நடத்தி நமது பலத்தை காட்டி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.