அடிமட்ட தலைவரில் இருந்து முதல்வரான ஏக்நாத் ஷிண்டே! புகழ்ந்து தள்ளி வாழ்த்திய பிரதமர் மோடி!
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்ற நிலையில் இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சியை நடத்தின. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்த கூட்டணி மீது சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்கள் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இவர்கள் மீண்டும் மகாவிகாஷ் அகாடி கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

புதிய ஆட்சிக்கு உரிமை கோரல்
இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை உருவானது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டது. இது முடியாது என்பதால் நேற்று இரவு உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வியூகம் வகுத்தது. இதனைத்தொடர்ந்து அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

முதல்வராக ஏக்நாத் ஷிண்டே
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார். துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். மேலும் தான் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என அவர் தெரிவித்தார்.

துணை முதல்வரான பட்னாவிஸ்
ஆனால் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றனர். பாஜக கட்சி மேலிட தலைவர்கள் அறிவுரையின்படி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு தனித்தனியே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துகள். ஒரு அடிமட்ட தலைவராக இருந்து அரசியல், சட்டசபை, நிர்வாக அனுபவத்தை கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவை ஏற்றம் பெற செய்வார் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

பட்னாவிசுக்கு வாழ்த்து
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிசுக்கும் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிசுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் உத்வேகம் அளிக்கிறார். அவரது அனுபவம் மற்றும் நிபுணத்துவம் மகாராஷ்டிரா அரசுக்கு சொத்தாக அமையும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிபாதையை மேலும் வலுப்படுத்துவார் என உறுதியாக நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications