வெளிநாடு சொன்னா கேட்பீங்க.. உள்நாட்டு முஸ்லீம்களின் குரல்கள் கேட்காது.. மோடியை கடுமையாக சாடிய ஓவைசி!
மும்பை: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய இஸ்லாமியர்களின் குரல்களை கேட்காத நரேந்திர மோடி அரசு, வெளிநாடுகளின் கண்டனங்களுக்கு பின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.
பாஜக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த நுபுர் ஷர்மா, ஞானவாபி வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தை பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கண்டன குரல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து நுபுர் ஷர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த ரணகளத்திலும்... நபிகள் நாயகம் அவதூறு பரபரப்புக்கு மத்தியில் இந்தியா வந்த ஈரான் அமைச்சர்
நுபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவர் மீது மகாராஷ்டிரா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரும் ஜூன் 22ஆம் தேதி நபிகள் நாயகம் குறித்த பேச்சுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கோரி போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
பாஜக புதிய உத்தரவு
பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தவரின் பேச்சுக்கு சர்வதேச அளவில் கண்டன குரல்கள் எழுந்ததால், பாஜக ஊடகப் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக உத்தரவிடப்பட்டது. அதோடு, மதம் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கும் போது கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அசாதுதீன் ஓவைசி விமர்சனம்
நுபுர் ஷர்மா விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது 10 நாட்களுக்கு பின் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்நாட்டு இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தபோது, மத்திய அரசும் பாஜகவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த பின் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
Recommended Video
மத்திய அரசுக்கு கேள்வி
நபிகள் குறித்து அவதூறாக பேசியபோதே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கும். ஆனால் மத்திய அரசு காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஓவைசி விமர்சித்தார்.