ஆட்டிசம் குழந்தை என்பதால் விட்டு சென்ற அம்மா.. ‘எனக்கு பிறகு என் மகளை யார்?’ கலங்க வைத்த தந்தை.. நெகிழ்ச்சி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒளிபரப்பான ஒரு உண்மை சம்பவம், நிகழ்ச்சியை பார்த்த பலரையும் கண்கலங்க வைத்தது. "சிங்கிள் ஃபாதர்" ஆக பல ஆண்டுகளாக தனது ஆட்டிசம் பாதித்த சிறப்பு தேவையுள்ள மகளை தனியாக வளர்த்து வரும் அகமது பாஷா பகிர்ந்த வாழ்க்கைக் கதை, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அகமது பாஷா, பெரியதாக தையல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால் அவர் தினமும் சுமந்து செல்லும் சுமை, சாதாரண தந்தையின் சுமை அல்ல. ஆட்டிசம் மற்றும் பலதிறன் குறைபாடு கொண்ட தனது மகளை கடந்த 9 ஆண்டுகளாக தனியாக பார்த்துக்கொண்டு வருகிறார்.

தமிழா தமிழா நிகழ்ச்சி
தமிழா தமிழா மேடையில் பேசிய அவர், தனது வாழ்க்கையின் வலியை உருக்கமாக பகிர்ந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்ததாகவும், அன்புக்காக ஏங்கிய வாழ்க்கையில் திருமணம் தான் ஒரு புதிய நம்பிக்கை என்று நினைத்ததாகவும் கூறினார். மகள் பிறந்த நாள் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என்றாலும், சில மாதங்களிலேயே குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததாம்.
மருத்துவர்கள் குழந்தைக்கு ஆட்டிசமும் பலதிறன் குறைபாடும் இருப்பதாக கூறியபோது வாழ்க்கையே நின்றுபோனதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதைவிட பெரிய அதிர்ச்சி, தனது மனைவி குழந்தையை ஏற்க மறுத்ததே.
மனைவியின் பிரிவு
ஆரம்பத்தில் ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்த மனைவி பிறகு பிறந்த குழந்தையும் ஆட்டிசம் பாதித்ததால் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், பின்னர் விவாகரத்து நடந்தபோதும் கோர்ட்டில் தனது குழந்தையை திரும்பிப் பார்க்க கூட அவர் முன்வரவில்லை என்றும் அகமது பாஷா கண்கலங்க கூறியிருந்தார்.
தந்தை பட்ட கஷ்டம்
கொரோனா காலத்தில் வேலை இல்லாமல், குழந்தைக்கான பால், டயப்பர் வாங்க கூட கஷ்டப்பட்டதாக அவர் பகிர்ந்த சம்பவம் பலரது மனதையும் நொறுக்கியது. குழந்தையை தூங்க வைத்து வீட்டை பூட்டிவிட்டு அதிகாலை பால் பாக்கெட் போடும் வேலைக்கு போனதையும், சீக்கிரம் திரும்பி வர முடியாத நாட்களில் குழந்தை தனியாக அழுத சம்பவங்களையும் நினைத்து உருக்கமாக பேசியிருந்தார்.
"என் மகளுக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை 'அப்பா' தான். நான் குரல் கொடுத்தா சிரிப்பா. அந்த சிரிப்புக்காகத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்," என்ற அவரது வார்த்தைகள் நிகழ்ச்சியில் இருந்தவர்களையே அமைதியாக்கியது.

அரசுக்கு கோரிக்கை
இப்போது மகளின் சிகிச்சை, தெரபி, தினசரி செலவுகள் என ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தாலும், "எனக்கு பிறகு என் மகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?" என்ற பயம்தான் தன்னை தினமும் உடைக்கிறது என்று அவர் கூறியிருப்பது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. மேலும் இதற்கு அரசு சார்பில் உதவ வேண்டும் என்றும் கலங்க வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
Tamizha Tamizha: இந்த நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக்கூடாது.. தமிழா தமிழாவில் நடந்த சம்பவம்! இது பலருக்கும் பாடம்
பொதுவாக தனியாக குழந்தைகளை கவனித்து வரும் சிங்கிள் மதர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட சிங்கிள் பாதருக்கு கிடைக்கவில்லை. யாரிடமாவது உதவி கேட்டால், நீ ஆம்பள தானே உழைச்சு உன் பிள்ளையை காப்பாத்துன்னு சொல்லுறாங்க. ஆனால் குழந்தையை தனியாக விட்டு விட்டு உழைக்க போக முடியவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் நல்லபடியாக இருக்கிற பெண் குழந்தைகளை பாதுகாப்பதே பயமாக இருக்கிறது. இதுபோன்ற சிறப்பு குழந்தையை பாதுகாப்பது எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறது தெரியுமா? என்று அவர் வேதனையுடன் கேட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் "இதுதான் உண்மையான அப்பா", "இந்த தந்தைக்கு உதவி செய்ய வேண்டும்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications