புனேவின் பிரபல தொழிலதிபர் கைது.. மதுபோதையில் மகன் காரை ஏற்றி இருவரை கொன்ற வழக்கில் போலீஸ் அதிரடி
மும்பை: புனேவில் மதுபோதையில் காரை ஏற்றி இருவரைக் கொன்ற 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பேசுபொருள் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் சிறுவனின் தந்தையான புனேவின் பிரபல தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நள்ளிரவு நேரங்களில் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தே வருகிறது. பெரும்பாலும் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.

அதிவேகமாகக் காரை இயக்குவதால் சாலையில் செல்லும் அப்பாவி மக்களுக்கும் கூட ஆபத்து ஏற்படுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்தது.
விபத்து: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது. அன்றைய தினம் சிறுவன் தனது நண்பர்களுடன் போர்ஷே ஸ்போட்ஸ் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளான். அந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதிய நிலையில், அந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் பப் சென்றுவிட்டுத் திரும்பும் போது தான் இந்த விபத்து அரங்கேறி உள்ளது. அதிவேகமாக வந்த கார் இவர்கள் பைக்கின் மீது மோதியதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மணிக்கு சுமார் 200 முதல் 240 கிமீ வேகத்தில் கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
ஜாமீன்: இந்த விபத்து தொடர்பாக சில வீடியோ காட்சிகளும் வெளியாகின. அந்த கார் அதிவேகமாகச் சென்று பைக் மீது மோதும் ஒரு சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அதேபோல விபத்தை ஏற்படுத்திய அந்த 17 வயது சிறுவனை அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் அன்றிரவே அந்த சிறுவனைக் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், அந்த சிறுவனுக்கு வெறும் 14 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் விசாரணையில் நடந்த வாதங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ஜாமீன் மறுக்கும் அளவுக்குக் குற்றம் தீவிரமானதாக இல்லை என்று கருதியே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். சாலை விபத்துகள் குறித்துக் கட்டுரை எழுத வேண்டும், 15 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை வித்து ஜாமீன் வழங்கப்பட்டது.
கார் மோதியதில் இருவர் பலி! விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கட்டுரை எழுத சொல்லி ஜாமீன் தந்த நீதிமன்றம்
தந்தை கைது: இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 பேரை கொன்ற 17 வயது சிறுவனின் தந்தையை புனே போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், புனேவை சேர்ந்த அந்த பிரபல தொழிலதிபரை மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து போலீசார் கைது செய்யப்பட்டார்.
கடும் நடவடிக்கை உறுதி: இது குறித்து புனே போலீசார் கூறுகையில், "இந்த விபத்து தொடர்பாக ஐபிசி 304 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவனுக்கு 17 வயதாகும் நிலையில், மைனராக கருதக்கூடாது.. வளர்ந்த நபராகவே கருதி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications