கார் மோதியதில் இருவர் பலி! விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கட்டுரை எழுத சொல்லி ஜாமீன் தந்த நீதிமன்றம்
மும்பை: புனேவில் பிரபல கட்டுமான தொழிலதிபர் ஒருவரது 17 வயது மகன், மதுபோதையில் ஏற்படுத்திய கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், சாலை விபத்துகள் குறித்துக் கட்டுரை எழுதச் சொல்லி நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
புனேயில் சனிக்கிழமை இரவு அதிவேகமாக வந்த போர்ஷே ஸ்போட்ஸ் கார் ஒன்று பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பைக்கில் இருந்த அந்த தம்பதிகள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய அந்த காரை ஓட்டியது புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் 17 வயது சிறுவன் என்று வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் மதுபோதையில் கார் ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.
விபத்து: அந்த தொழிலதிபரின் மகன் உட்பட சிலர் புனேயின் கல்யாணி நகரில் உள்ள ஒரு பப்பில் பார்ட்டி முடிந்துவிட்டு காரில் திரும்பியுள்ளனர். அப்போது அதிவேகமாக அவர்கள் காரை ஓட்டிய நிலையில், கோரேகான் பூங்காவில் இந்த விபத்து நடந்துள்ளது.
அதிவேகமாகக் காரை ஓட்டி வந்த மைனர் சிறுவன் பைக் மீது மோதியுள்ளான். இதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பிறகு கார் சாலையில் இருந்த தடுப்பு ஒன்றில் மோதி நின்றுள்ளது. இதற்கிடையே காரில் இருந்து வெளியே வந்த அந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் பிடித்துத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
240 கிமீ வேகம்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் பப் சென்றுவிட்டுத் திரும்பும் போது தான் கார் அவர்கள் சென்ற பைக்கில் மோதியிருக்கிறது. அந்த கார் மணிக்கு சுமார் 200 முதல் 240 கிமீ வேகத்தில் வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
14 மணி நேரத்தில் ஜாமீன்: இந்த விபத்தைத் தொடர்ந்து மைனர் சிறுவன் உட்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இருப்பினும், காரை ஓட்டி வந்த அந்த தொழிலதிபரின் மகனுக்கு வெறும் 14 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. ஜாமீன் விசாரணையின் போது என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ஜாமீன் மறுக்கும் அளவுக்குக் குற்றம் தீவிரமானதாக இல்லை என்று கருதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கட்டுரை எழுத உத்தரவு: விபத்து நடந்து 14 மணி நேரத்திற்குள் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அப்போது அச்சிறுவனுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.. 15 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது முதல் நிபந்தனை.. மேலும், மனநல மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்றும் சாலை விபத்துகள் மற்றும் தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதை ஒழிப்பு மையத்தில் சேர வேண்டும் மற்றும் போக்குவரத்து விதிகளைப் படித்து இது தொடர்பாகச் சிறார் வாரியத்திடம் விளக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, வரும் காலத்தில் விபத்து ஏற்படுவதைப் பார்த்தால் அதில் சிக்கியவர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications