சட்டசபையில் சாரி சொன்ன முதல்வர்.. கருணாநிதி பெயரை உச்சரித்துவிட்டு மனம் மாறிய விஜய்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். அவையில் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய், 2021 ல் சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை மேற்கோள் காட்டினார்.
அப்போது கருணாநிதி என்று பெயரை சொன்ன விஜய், உடனே சாரி சொல்லிவிட்டு கலைஞர் என திருத்தி கூறினார். தனது பேச்சின் போது, முதல்வர் விஜய், "சாரி, சாரி.. சாரி என கூறிய அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

முதல் விஜய் பதிலடி
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். கடந்த இரு தினங்களாக சட்டசபையில் காரசார வாதங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ரமேஷ் ஆகியோர் காரசாரமாக பதிலடி கொடுத்தனர். முதல்வர் விஜய் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த போதும், அமைச்சர்களே பதிலளித்தனர். ஆனால் இன்று முதல்வர் பதிலுரையின் போது விஜய் சரவெடியாய் வெடித்தார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து காட்டமாக பேசினார். ஆளுநர் உரையின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்ட பிறகு தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதாகவும், இது அவை மரபுக்கு எதிரானது எனவும் திமுக விமர்சித்தது.
சாரி.. சாரி என்ற விஜய்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் விஜய், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பட திறப்பு விழாவுக்கு அப்போதைய குடியரசுத்தலைவர் சட்டமன்றம் வருகை தந்ததாகவும், அப்போது அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது எனவும், தேசிய கீதமே முதலில் பாடப்பட்டதாகவும் பேசினார்.
இதை சுட்டிக்காட்டி பேசும் போது, கருணாநிதி எனக் குறிப்பிட்ட முதல்வர் விஜய், உடனே சாரி சொன்னார். முதல்வர் பேச்சின் விவரம்: "மரபு காக்கும் உரிமை போராளிகளை நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கனும். 2021 ஆகஸ்ட் 2 நியாபகம் இருக்கா? "Centenary Celebration of Tamil Nadu Legislature" நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி... சாரி, சாரி.. சாரி கலைஞர்.. அவர்களுடைய புகைப்படத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைக்கும் நிகழ்வு.
இரண்டாவது இடத்திற்கு தள்ளியது யார்?
அதில், தேசிய கீதத்திற்கு அப்புறமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று சொன்னது நியாபகம் இருக்கா. அதுவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகைப்பட திறப்பு விழாவில். தமிழை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது யார் என்று நியாபகம் இருக்கா? தேசிய கீதத்தை நிகழ்ச்சி முடியும் போது இரண்டாவதாகவும் பாடினார்கள்" என்றார்.
இதெல்லாம் கேட்டால் என்ன சொல்லுவாங்க என்றால், அது ஜனாதிபதி கலந்துகிட்ட நிகழ்ச்சி என்று சொல்வார்கள்.. அதெல்லாம் அப்படித்தான், அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது என்று சொல்வார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்புதான் இப்படி செய்து கொண்டு இருந்தார்கள். தேர்தலுக்கு பிறகும் அதையேதான் செய்கிறார்கள்.. என்று விஜய் பேசினார்.















Click it and Unblock the Notifications