எங்கு பார்த்தாலும் ரத்தம்! சரிந்த உடல்கள்.. மும்பையை கதற விட்ட "கேங் வார்.." தாவூத் வரலாறு இதுதான்
மும்பை: தாவூத் இப்ராஹிம் குறித்த தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், 1980கள், 1990களில் மும்பை நிழல் உலகில் நடந்த மோதல்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
மும்பை நிழல் உலகை ஒரு கட்டத்தில் தனது கட்டுக்குள் வைத்திருந்தவர் தாவூத் இப்ராஹிம். இப்போது பாகிஸ்தானில் வசித்து வரும் அவரது உடல்நிலை குறித்து இப்போது பல்வேறு வகையான தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த காலங்களில் மும்பை நிழல் உலகில் கடந்த காலங்களில் என்ன நிகழ்வுகள் நடந்தன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மும்பை சாலைகள்: 1980கள், 1990களில் மும்பை சாலைகளில் ரத்த ஆறு ஓடியது என்றே சொல்லலாம். அந்த காலகட்டத்தில் மும்பை நிழல் உலகில் பேராசை, லட்சியம் மற்றும் இரக்கமற்ற சதி ஆகியவை நிறைந்து இருந்தது. தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ராஜன் ஆகியோர் மும்பை நிழல் உலகில் எதிரிகளை ஒழிக்கவும் தங்கள் சாம்ராஜ்யங்களைச் செதுக்கவும் அதீத வன்முறையைப் பயன்படுத்தினர்.
மும்பை நிழல் உலகை இவர்கள் தான் தோற்றுவித்தார்கள் எனச் சொல்ல முடியாது. ஏற்கனவே கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோர் அசைக்க முடியாத இடத்திற்குச் சென்றனர். ஆனால், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதாக இருந்தது தாவூத்தின் இலட்சியம். இது மும்பை சாலைகளில் வெளிப்படையான போராக மாறியது.
தொடர் மோதல்: அங்கே தொடர்ச்சியாக இரண்டு கேங்களுக்கு இடையே மோதல்கள் இருக்கும். தோட்டாக்கள் சதைகளைக் கிழிக்கும். ஒரு கட்டத்தில் பயம் தான் மும்பையின் அடையாளமாகக் கூட மாறி போனது. ஒவ்வொரு கேங்கும் மற்ற கேங்கில் இருந்து ரவுடிகளை கொலை செய்தனர். இந்த அதிகார போட்டியில் தாவூத் இப்ராஹிம் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது. அவரது சகோதரர் சபீர் இப்ராஹிம் என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கேங்கும் தங்கள் எதிரிகள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஒவ்வொருவரையும் கொன்றனர். திரைப்பட தயாரிப்பாளர் குல்ஷன் குமார் மற்றும் புகழ்பெற்ற மருத்துவர் தத்தா சமந்த் ஆகியோரும் இந்த நிழல் உலக மோதலில் பலியாகினர். அப்போது ஊழல் எல்லா இடங்களிலும் தலைவிரித்து ஆடியது. இந்த ஊழலும் லஞ்சமும் தான் இத்தனை கொடூரங்கள் நடந்த போதிலும் சட்டத்தைத் தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது.
தாவூத்: இதில் மற்ற கேங்களை காலி செய்துவிட்டு தாவூத் நிழல் உலக ராஜாவாக உருவெடுத்தார். அவரது தந்திரமான திட்டமும் இரக்கமற்ற மனநிலையும் தான் அவருக்கு உதவியது. அந்தக் காலகட்டத்தில் அவரது பெயரைச் சொன்னாலே பயம், வெறுப்பு, மரியாதை என எல்லாம் சேர்ந்து ஒரு ரியாக்ஷன் தான் கிடைக்குமாம். ஒட்டுமொத்த மும்பை நகரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
இப்படி மும்பை நிழல் உலகைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் அவரது போட்டோ கூட பெரும்பாலான நபர்களிடம் இல்லை, ஒரு மர்ம நபராகவே அவர் இருந்தார். ஒரு கட்டத்தில் மும்பை தாண்டி துபாய், பாகிஸ்தான் நாடுகளிலும் அவரது க்ரைம் நெட்வோர்க் விரிவடைந்தது. இதற்காக டி கம்பெனி தனியாக ஒரு நிறுவனத்தையே நடத்தும் அளவுக்குப் போனது.
வீழ்ந்தது எப்படி: ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. ரத்தம் மற்றும் பயத்தில் கட்டப்பட்ட பேரரசுகள் கூட வீழ்ந்துள்ளன. இதில் தாவூத் விதிவிலக்கு இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் மும்பை போலீஸ் தாவூத்தை குறிவைத்தது. அவரது ஆட்களைக் குறிவைத்து வேட்டையாடத் தொடங்கியது. மும்பையில் தனது பிடி தளர்வதை உணர்ந்த அவர் துபாய் தப்பிச் சென்றார். பிறகு அவர், அங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்.
மும்பை நிழல் உலகத்தைப் பிடிக்க 1980, 1990களில் அரங்கேறியது மிருகத்தனமான தாக்குதல்கள் மட்டுமில்லை.. அதில் லட்சியம் விரக்தி, விசுவாசம் துரோகம் என அனைத்துமே இருக்கிறது.












Click it and Unblock the Notifications