என்னதான் நடக்கிறது ரிசர்வ் வங்கியில்..? துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா ராஜினாமா!
மும்பை: ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வைரல் ஆச்சார்யா 2020ம் ஆண்டு பிப்ரவரி-க்கு பதிலாக, வரும், ஆகஸ்ட் மாதத்தில் நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸுக்கு (என்.ஒய்.யு ஸ்டெர்ன்) திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் (எம்.பி.சி) கடைசி கூட்டத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு ஆச்சார்யா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டு பதவிக்காலம்
2017 ஜனவரி 23ம் தேதி, ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக அரசால் நியமிக்கப்பட்டார் வைரல் ஆச்சார்யா. மூன்று ஆண்டு காலம் அவர் பதவியில் தொடருவார் என அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், வைரல் ஆச்சாரியா, ராஜினாமா செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கி சுதந்திரம்
ரிசர்வ் வங்கி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக, பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் வைரல் ஆச்சாரியா. 2018 அக்டோபரில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், பேசிய வைரல் ஆச்சாரியா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

ஆளுநர் பதவி
ரிசர்வ் வங்கியின் சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், மத்திய அரசுடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் 2018 ஜனவரியில் கவர்னர் பதவியில் இருந்து விலகினார். இதன்பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.

துணை ஆளுநர் ராஜினாமா
அப்போதே, வைரல் ஆச்சாரியாவும், தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று பரபரப்பு பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், அவர் தற்போது ராஜினாமா செயதுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் பத்ரா மற்றும் நிதி அமைச்சக, முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியோரில் ஒருவர், வைரல் ஆச்சார்யாவிற்கு பதிலாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications