நுபுர்சர்மாவுக்கு ஆதரவு.. இளைஞரை கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டிய கொடூரம்.. ஷாக்கில் மகாராஷ்டிரா
மும்பை: இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையை கிளப்பிய நுபுர்சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தாதக கூறி மகாராஷ்டிராவில் 23 வயது இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசினார். இது சர்ச்சையானது.
இதையடுத்து நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதனால் இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியது.
நுபுர் சர்மாவின் வீடியோ பார்த்த இளைஞருக்கு கத்திக்குத்து.. பீகாரில் நடந்த கொடூர சம்பவம்
இளைஞர் மீது தாக்குதல்
இந்நிலையில் தான் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட இளைஞர் மீது ஆயுதத்தால் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு: மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டம் கார்ஜாட் டவுனில் வசிப்பவர் பிரதீக் என்ற சன்னி ராஜேந்திர பவார் (வயது 23). இவர் கடந்த 4ம் தேதி மாலையில் அக்காபாய் சவுக்கில் உள்ள மருந்து கடை அருகே நின்றார். அப்போது அவரை சூழ்ந்த 14 நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
கத்திக்குத்து-அரிவாள் வெட்டு
ஹாக்கி ஸ்டீக்கால் தாக்கியவர்கள் கத்தியால் அவரை குத்தியதோடு, அரிவாளல் வெட்டினர். இதனால் அவர் ரத்தம் கொட்ட கொட்ட சரிந்து விழுந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு தனியிார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் ஏன்?
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். முதற்கட்ட விசாரணையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு செய்ததாக கூறி பிரதீக் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛பிரதீக் மற்றும் அமித்மானே ஆகியோர் பைக்கில் நண்பர்களுக்காக காத்திருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் மற்றவர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
இதற்கு முன்பு 2 பேர் கொலை
முன்னதாக நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்த பதிவிட்டதாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த கண்ணையாலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவருக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மெடிக்கல் கடைக்காரரான உமேஷ் பிரஹலாத்ராவ் என்பவரும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.