கிரிக்கெட் கடவுளையும் விட்டு வைக்காத கொரோனா.. லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு தொற்று உறுதி!
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அடங்கி இருந்த கொரோனா தற்போது தினமும் 60,000-க்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனா
நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா , தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80% பாதிப்புகள் உள்ளன. ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி கொரோனா அனைவரையும் சரிசமமாக தாக்கி வருகிறது. தொடர்ந்து அரசியல்வாதிகளை பாதிக்கும் கொரோனா சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு தொற்று ஏற்பட்டது.

சச்சினுக்கு கொரோனா
இந்த நிலையில் 'உலக கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது:-

தனிமைப்படுத்திக் கொண்டேன்
நான் கொரோனா சோதனை செய்து கொண்டு, வீட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளுடன் இருந்தேன். இந்த நிலையில் இன்று காலை எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உள்ளதால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

பாதுகாப்பாக இருங்கள்
எனது குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் தொற்று இல்லை. எனக்கு உதவி செய்த மருத்துவ பணியாளரகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று சச்சின் கூறியுள்ளார்.சச்சின் குணமடைய பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications