முதுகுத்தண்டில் பாய்ந்த கத்தி.. லீக்கான திரவம்.! சைஃப் அலி கான் உடல்நிலை எப்படி இருக்கு! புதிய தகவல்
மும்பை: பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் மீது நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது.. எங்கெல்லாம் காயம் ஏற்பட்டது என்பது குறித்த முக்கிய தகவல்களை அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழு பகிர்ந்துள்ளது.
பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் வீட்டில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே நுழைந்துள்ளார். அவர் கொள்ளையடிக்க உள்ளே வந்ததாகச் சொல்லப்படுகிறது.

என்ன நடந்தது:
கொள்ளையனை முதலில் வீட்டில் வேலை செய்யும் ஊழியர் பார்த்த சூழலில், அவர் கத்தியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு வெளியே வந்த சைஃப் அலி கான் அந்த நபரைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்படவே, கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைஃப் அலி கானை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு ஆறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதுகெலும்பில் மோசமான காயம்:
இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து சில மேஜர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த கத்திக்குத்தின் போது கத்தியின் துண்டுகள் அவரது முதுகெலும்பைத் தாக்கியுள்ளது. இதனால் சைஃப் அலிகானின் முதுகெலும்பில் இருந்து திரவம் கசியத் தொடங்கியதாக லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்தார். முதுகுத்தண்டில் ஏற்பட்ட இந்த காயத்தைச் சரி செய்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கை மற்றும் கழுத்தில் கத்திக்குத்து இருந்த சூழலில், அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 54 வயதான சைஃப் அலி கான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவர் இப்போது குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன
சைஃப் அலி கானுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர் நிதின் டாங்கே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சைஃப் அலி கான் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தியின் துண்டு முதுகெலும்பில் சிக்கிய சூழலில் அது தொராசி முதுகுத் தண்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொராசிக் முதுகெலும்பு என்பது கழுத்தின் அடிப்பகுதிக்கும் விலா எலும்புகளுக்கும் நடுவே உள்ள முதுகெலும்பின் ஒரு பகுதியாகும். இது நமது உடலில் ரொம்பவே முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இதில் தான் கத்திக்குத்து காரணமாகக் காயம் ஏற்பட்டுள்ளது.
சீராக இருக்கிறார்:
மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "கத்தியை அகற்றவும், முதுகுத் தண்டு திரவம் கசிந்த சூழலில் அதைச் சரிசெய்யவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இடது கையிலும், கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. அங்கும் பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டார்" என்றார்
சிகிச்சை குழுவில் உள்ள மற்றொரு மருத்துவர் கூறுகையில், "சைஃப் அலி கான் சீராகக் குணமடைந்து வருகிறார். அவர் 100% குணமடைய வேண்டும். அப்போது தான் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து யோசிக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications