அஜித் பவாரை தகுதிநீக்கம் செய்யக் கோரி மனு.. சரத்பவார் கையில் எடுத்த அஸ்திரம்.. மகா.அரசியலில் பரபர
மும்பை: அஜித் பவார் மற்றும் அவருடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இணைந்த 8 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு கொடுத்ததால் அதிருப்தியில் இருந்த அஜித்பவார் தனது தலைமையில் 30 எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார்.

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார், மூத்த தலைவர்களான சக்கன் புஜ்பால், திலிப் வல்சே பாட்டீல், தனஞ்செய் முண்டே அதிதி தத்காரே உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றுவிட்டனர். இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 53 எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஆதரவு தமக்கு இருக்கிறது.. ஆகையால் தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களுடையது..
கட்சியின் சின்னமும் எங்களுடையது.. தேசியவாத காங்கிரஸ் கட்சியே நாங்கள்தான் என அஜித்பவார் அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமக ஈடுபட்டு இருந்த சரத் பவாருக்கு தனது அண்ணன் மகன் அஜித்பவாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், கட்சியில் இதுபோன்று நடப்பது தனக்கு புதிது அல்ல.
எனது வீடு பிரிந்தது என்று நான் கூறமாட்டேன். இந்த பிரச்சினை எனது வீடு தொடர்பானது அல்ல, இது மக்களின் பிரச்சினையாகும். வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். கட்சியை மீண்டும் வலுப்படுத்த பாடுபடுவோம். எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அதிருபதி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுப்பார்கள்" என்றார்.
இந்த நிலையில், அஜித் பவார் மற்றும் அவருடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இணைந்த 8 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் தேசிய வாத காங்கிரஸ் மனு அளித்துள்ளது. 10-வது அட்டவணயின் கீழ் இந்த மனுவை மின்னஞ்சல் மூலமாக மகாராஷ்டிர சபாநாயகருக்கு அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், " மகாராஷ்டிர சபாநாயகரிடம் நாங்கள் தகுதி நீக்க மனு அளித்துள்ளோம். விரைவில் ஆவணங்களை அளிக்க உள்ளோம். 9 பேருக்கு எதிராக தகுதி நீக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவார்கள் என நம்புகிறோம்" என்ரார்.
கட்சி மாறும் எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் 10வது அட்டவணை இடமளிக்கிறது. இது எம்பி, எம்எல்ஏக்களுக்கு பொருந்தும். ஆனால் ஒரு கட்சியில் உள்ள எம்எல்ஏக்களில் 3-ல் ஒரு பங்கு ராஜினாமா செய்தல் அல்லது 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறோரு கட்சியுடன் இணைதல் உள்ளிட்டவற்றுக்கு இந்த சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.
அப்படி பார்த்தால் அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கட்சிதாவல் தடை சட்டம் பாயாமல் இருக்க 36 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இல்லையெனில் அஜித் பவார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அஜித் பவார் தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கட்சிதாவல் தடை சட்டத்தின் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை. எனினும் இதில் சபாநாயகர் எடுக்கும் முடிவே மிக முக்கியமானது என சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications