பிரேக் போட முயன்றேன்.. நிற்கவில்லை.. ரயில் ஏறிவிட்டது.. அவுரங்காபாத் கொடூரம் பற்றி ஓட்டுநர் குமுறல்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் 17 பேர் பலியானது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் 17 பேர் பலியானது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் ஓட்டுனரும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர். கர்மாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பலியான எல்லோரும் மகாராஷ்டிராவில் ஜல்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி உள்ளனர்.
இவர்கள் எல்லோரும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதிக்கு ரயில் ஏறுவதற்காக இவர்கள் நடந்து சென்றுள்ளனர்.

பலியானார்கள்
இடையில் களைப்பாக இருக்கிறது என்று தண்டவாளத்தில் தூங்கி உள்ளனர். ரயில் அந்த பக்கம் வராது என்று நினைத்துக் கொண்டு 17 பேரும் தண்டவாளத்தில் படுத்து தூங்கி இருக்கிறார்கள். ஆனால் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து,வேகமாக அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 17 பேர் பலியானார்கள். இரண்டு பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர்.

விளக்கம் என்ன
இந்த விபத்து தொடர்பாக ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. வெளிச்சம் இல்லாததால் தண்டவாளத்தில் மனிதர்கள் படுத்து இருப்பதை ஓட்டுநர் சரியாக கவனிக்கவில்லை. உடல் களைப்பு காரணமாக அவர்கள் தண்டவாளம் நடுவில் படுத்துள்ளனர். ஆனால் சில மீட்டர் தூரத்தில் இருக்கும் போது ஓட்டுநர் அந்த நபர்களை கவனித்து இருக்கிறார்.

பிரேக் போட்டார்
இதனால் வேகமாக அவர் பிரேக் போட முயன்று இருக்கிறார். ஆனால் அவர் பிரேக் அழுத்தியும் ரயில் நிற்கவில்லை. அவர்கள் மீது ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ரயில் அவர்கள் மீது ஏறி சென்ற பின்தான் நின்று இருக்கிறது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக தீவிரமான விசாரணையை நாங்கள் நடத்தி வருகிறோம், என்று விளக்கம் அளித்துள்ளனர்.

என்ன விளக்கம்
இது தொடர்பாக ரயில் ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் மிக அருகில் வந்த பின்தான் அவர்கள் படுத்து இருப்பதை பார்த்தேன். தூரத்தில் பார்க்க முடியவில்லை. அவர்களை பார்த்ததும் ரயிலை நிறுத்த பிரேக்கை அழுத்தினேன். ஆனால் நான் எவ்வளவு முயன்றும் ரயில் நிற்கவில்லை. அதன்பின் அந்த சம்பவம் நடந்தது. உடனே இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications