"பயங்கரவாதிகள்" என்று விவசாயிகளை சொல்பவர்கள் மனிதர்களே கிடையாது.. கொந்தளித்த உத்தவ் தாக்கரே
விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா என்று உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்
மும்பை: "நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்" என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த போராட்டம் 18 நாட்களை கடந்து தீவிரமாகி வருகிறது.
மற்றொரு பக்கம், இவர்களின் போராட்டத்தை முடிவுசக்கு கொண்டு வர மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. ஆனால், இதுவரை நடத்திய எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டன. எனினும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.
இன்று விவசாயிகள் நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளனர்... அதேபோல, நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போகிறார்கள்.
இதற்கிடையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் நுழைந்துவிட்டதாக பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்... இதே கருத்தைதான் மத்திய அரசும் தெரிவித்து வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் இதுபோன்றே கருத்து சொன்னதுடன், முதலமைச்சர், உத்தவ் தாக்கரேவின் ஆட்சியில் மகாராஷ்டிராவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
இதற்குதான், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே சரியான பதிலடியை தந்திருக்கிறார்.. இதுகுறித்து அவர் சொன்னதாவது: "மகாராஷ்டிராவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டி வருகிறார்.
ஆனால், இப்போது, டெல்லியில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? நமக்காக உணவு வழங்குபவர்களை பயங்கரவாதிகள் என்று நீங்கள் சொல்கிறீர்களே? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்.
விவசாயிகளுக்கு "அநீதி" செய்கிறோம் என்பதை பாஜக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்கு பதிலாக, இப்படி அவர்களை பாகிஸ்தானியர் என்றும், தேச விரோதிகள் என்றும் சொல்வதா?" என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.