நீட் தேர்வு முறைகேடு: உ.பி, பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்.. இப்ப மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது
மும்பை: நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நீட் முறைகேடு தொடர்பாக உ.பி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாகின. நீட் நுழைவுத் தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் 1563 பேருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கியது தேசியத் தேர்வு முகமை. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் 1563 பேரின் நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு இன்று மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.

அத்துடன் பீகாரில் நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம் பேரலை சுனாமி போல விஸ்வரூபமாகிக் கொண்டே இருக்கிறது. உ.பி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் என ஒவ்வொரு மாநிலமான இந்த முறைகேடு சங்கிலித் தொடர் நீள்கிறது. நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடுகள் தொடர்பாக மொத்தம் 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை நடத்துகிற தேசியத் தேர்வு முகமை தலைவரையும் நீக்கி இருக்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
அதேபோல இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. 18-வது லோக்சபா கூட்டத் தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றும் போது ந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் விற்பனை விவகாரம் மகாராஷ்டிராவையும் எட்டியிருக்கிறது. நீட் வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2 ஆசிரியர்களை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications