யாத்திரையில் பாலியல் தொல்லை.. மத்திய பெண் அமைச்சரின் மகளுக்கு நேர்ந்த கதியை பாருங்க.. அதிர்ச்சி
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ள பெண் ஒருவரின் மகள் உள்பட மேலும் சில சிறுமிகளுக்கு, சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் இந்து பண்டிகைகள் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 26ம் தேதி மகாசிவராத்திரி கடைப்பிடிக்கப்பட்டது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை மகாசிவரா்த்தியை தொடர்ந்து சந்த் முக்தை யாத்திரை என்பது நடக்கும்.

இதில் ஏராளமானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் மகாராஷ்டிராவின் ஜால்கான் பகுதியில் சந்த் முக்தை யாத்திரை விழாவில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக பெண் எம்பியும், மத்திய இணையமைச்சருமான ஒருவரின் மகள் பங்கேற்றார்.
யாத்திரையின்போது சிலர் கும்பலாக சேர்ந்து மத்திய இணையமைச்சரின் மகள் உள்பட மேலும் சில சிறுமிகளை கிண்டல் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய இணையமைச்சரின் மகளுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அவர் மைனர் பெண். அவரது பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலரை மிரட்டி தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி மத்திய இணையமைச்சராக உள்ள தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மத்திய பெண் அமைச்சர் உடனடியாக போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவம் குறித்து மத்திய பெண் அமைச்சர் கூறுகையில், ‛‛சந்த் முக்தை யாத்திரை என்பது ஒவ்வொரு ஆண்டு மகாசிவராத்திரியையொட்டி நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு எனது மகள் யாத்திரைக்கு சென்றார். அப்போது சில இளைஞர்கள் எனது மகளை துன்புறுத்தி உள்ளனர். இதுபற்றி போலீசில் புகாரளித்து உள்ளேன்'' என்றார்.
இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படைபோலீசார் தொல்லை கொடுத்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது வரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் குறித்த முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் அவர்களையும் போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில், ‛‛கடந்த பிப்ரவரி 28 ம் தேதி முக்தை நகர் தாலுகா கோதலி கிராமத்தில் யாத்திரை நடந்தது. அனிகெட் குய் மற்றும் 6 நண்பர்கள் யாத்திரையில் பங்கேற்றனர். இந்த கும்பல் 3-4 சிறுமிகளை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்''என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‛‛சில கட்சியில் உள்ளவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மோசமான நடவடிக்கை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இந்த வகையான தொல்லை என்பது மிகவும் தவறானது. தவறு செய்தவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications