முடிவெடுங்கள்.. மத்திய அரசுக்கு பயப்பட வேண்டுமா, எதிர்த்து நிற்க வேண்டுமா? உத்தவ் தாக்ரே ஆவேச கேள்வி
மும்பை: மத்திய அரசுக்கு பயப்பட வேண்டுமா அல்லது எதிர்த்து நிற்க வேண்டுமா என்பதைப் பற்றி நாம் முடிவு செய்தாக வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடத்தும் முதல்வர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகிய மொத்தம் 7 மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
நீட், ஜேஇஇ-க்கு எதிர்ப்பு: மமதா உட்பட 7 பாஜக அல்லாத முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு
முதல்வர்கள் ஆலோசனை
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்காமல் இருப்பது, கொரோனா பரவல் காலகட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது, மத்திய அரசின் அதிகார குவிப்பு போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதில் பேசிய முதல்வர்கள் அனைவருமே, மத்திய அரசு, மாநிலங்களில் உரிமையை நசுக்குவதாக ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஒரே நபரிடம் அதிகார குவியல்
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது உரையின் போது கூறியதாவது: அமெரிக்காவில் பள்ளிகள் திறந்த போது சுமார் 97 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியதாக தகவல்கள் உள்ளது. இந்த சூழ்நிலையில் நமது நாட்டில் எப்படி தேர்வுகளை நடத்த முடியும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டுவந்த பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் மூலமாக அதிகாரம் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஆனால் இப்போது நேர் எதிராக நடந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒரு நபரின் கைகளில் அத்தனை அதிகாரமும் குவிந்து கிடக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டுக்கு இது உகந்தது கிடையாது.
சாமானியர்களின் குரல்
மாநில முதல்வர்களின் குரலை யாரும் நசுக்க கூடாது. ஏனெனில் இது சாமானியர்களின் குரல். மாநில அரசுகளும் மத்திய அரசு போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான். எனவே, இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள், சோனியா காந்தி தலைமையில் அவ்வப்போது நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
கடிதங்கள்
கடந்த ஏப்ரல் மாதம் முதல், மத்திய அரசிடமிருந்து மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வரவில்லை. தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டிக் கொண்டேதான் இருக்கிறோம். கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதுகிறோம். சில நேரங்களில் கடிதத்திற்கு பதில் மட்டும் வருகிறது. சில நேரங்களில் அதுவும் வருவது கிடையாது.
பயப்பட போகிறோமா
ஜிஎஸ்டி நிலுவை தொகையை கேட்டு மத்திய அரசிடம் நாம் யாரும் யாசகம் கோரவில்லை. இது மாநில அரசுக்கு சேர வேண்டிய உரிமை பணம். இதற்காக போராட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஜிஎஸ்டி வரி வசூல் பற்றி, மறு ஆய்வு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. உண்மையிலேயே ஜிஎஸ்டி வரி உதவுகிறதா, இல்லையா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இந்த வரிவசூல் காரணமாக மாநிலங்கள் இனிமேலும் கஷ்டப்படக்கூடாது. மத்திய அரசுக்கு பயப்பட போகிறோமா அல்லது எதிர்த்துப் போராடப் போகிறோமா என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
ஓரணியில் எதிர்க்கட்சிகள்
கொரொனா நோய்த்தொற்று கட்டுப்பாடு, ஜிஎஸ்டி விவகாரம், நீட், ஜேஇஇ தேர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு குரல் எழுந்துள்ள சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.