"பாடக் கூடாது.." ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கும் போதே.. மேடையேறிய போலீசார்.. அப்போ இசைப்புயல் என்ன செய்தார்
மும்பை: இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும் போதே, மேடையேறிய போலீசார் அதைப் பாதியில் நிறுத்தச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் டாப் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் ஏ ஆர் ரஹ்மான். ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரஹ்மான் தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதேபோல பல ஹாலிவுட் படங்களுக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உலகளவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் 2 படமும் ரீலிசாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான்: படங்களுக்கு இசையமைப்பதைப் போலவே ஏ ஆர் ரஹ்மான் அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை புனேவில் மிகப் பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை நடத்தினார். இதில் ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே இந்த மெகா இசைக் கச்சேரி பாதியிலேயே புனே போலீசாரால் நிறுத்தப்பட்ட பரபர சம்பவம் நடந்துள்ளது. புனே ராஜ்பகதூர் மில்ஸ் அருகே, ஒரு மைதானம் ஒன்றில் மிகப் பெரியளவில் இந்த இசைக் கச்சேரி நடந்தது. இதில் ரஹ்மான் ஒவ்வொரு பாடல்களாகப் பாட ஒட்டுமொத்த மைதானமே அதிர்ந்தது.

மேடையேறிய போலீஸ்: அப்போது சரியாக இரவு 10 மணிக்கு மேடையை நோக்கி போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் டார்ச்சை அடித்தார்.. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிவிட்டதால், நிகழ்வை உடனடியாக நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குச் சமிக்ஞை செய்யும் வகையில் அவர் இதைச் செய்தார். இது அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அப்போது ரஹ்மான் மேடையில் உயிரே படத்தில் இருக்கும் "தக்க தையா" பாடலை பாடிக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த கூட்டமே அவருடன் இணைந்து பாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மேடை ஏறிய போலீசார், கைக்கடிகாரத்தைக் காட்டி நேரம் முடிந்துவிட்டது நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துங்கள் என்பது போலக் கூறினார். ரஹ்மானும் போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல் படி பாடலை நிறுத்தினார்.
இருப்பினும், சில இசைக்கலைஞர்கள் தொடர்ந்து மியூசிக்கை வாசித்து வந்த நிலையில், கோபமடைந்த அதிகாரி, அவர்களிடம் சென்று, உடனடியாக இசைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் நேர விதிகளை மீறியதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போலச் சத்தம் போட்டனர்.

என்ன செய்தார்: போலீசார் திடீரென அவர்களாகவே இப்படி மேலே வந்து சொன்ன போது ரஹ்மான் அமைதியாக அவர்கள் சொன்னதைக் கேட்டு மேடையில் இருந்து இறங்கினார். அப்போது போலீசாருக்கு எதிராக அவர் எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. அதிருப்தியையும் காட்டவில்லை. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதனிடையே நிகழ்ச்சி முடிந்த பிறகு ரஹ்மான் இசை கச்சேரி தொடர்பாக சில படங்களைப் பகிர்ந்திருந்தார். அதிலும் அவர் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
ரஹ்மான் தனது ட்விட்டரில், "புனே! நேற்றிரவு காட்டிய அனைவரின் அன்புக்கும் நன்றி! இது அப்படியொரு ஒரு ரோலர் கோஸ்டர் கச்சேரியாக இருந்தது.! புனே இவ்வளவு கிளாசிக்கல் இசைக்குத் தாயகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை! உங்கள் அனைவருடனும் மீண்டும் பாட விரைவில் வருவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications