"அணு ஆயுத" கருவிகள்? பாகிஸ்தானுக்கு சீக்ரெட்டாக சீனா அனுப்பிய இயந்திரங்கள் என்ன! வந்த பரபர விளக்கம்
மும்பை: பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்குச் செல்லும் கப்பலில் சர்ச்சை சரக்குகள் இருந்த நிலையில், அதை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இப்போது கைப்பற்றியுள்ளனர். அவை எதற்கு பயன்படும் என்பது குறித்து பார்ப்போம்.
பாகிஸ்தான் ராணுவம் கடந்த பல ஆண்டுகளாகவே அணுசக்தி ஆய்வுகளை ரகசியமாகச் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த ஆய்வுகளை மேற்கொள்ளப் பாகிஸ்தானுக்குச் சீனா தான் உதவி வருகிறது. இதை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.

இதற்கிடையே சீனாவில் இருந்து கராச்சி நோக்கிச் சென்ற கப்பலில், பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய சரக்கு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில், மும்பை நவா ஷேவா துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்திய அதிகாரிகள்: உளவுத் துறை தகவல்கள் அடிப்படையில் இந்தியச் சுங்க அதிகாரிகள், கடந்த ஜனவரி 23ஆம் தேதி மால்டா கொடியுடன் சென்ற வணிகக் கப்பலான சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலாவை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர். அந்தக் கப்பல் கராச்சிக்கு சென்று கொண்டு இருந்தது. உள்ளே சிஎன்சி எனப்படும் கணினி சார்ந்த மெஷின் இருந்ததாக அதில் கூறப்பட்டு இருந்தது. இத்தாலிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த மெஷின் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டு இருந்தது.
என்ன கருவிகள்: சிஎன்சி இயந்திரங்கள் என்பது ஒரு கணினியால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரமாகும். இதன் திறன், மற்றும் துல்லியம் காரணமாகப் பல துறைகளில் இதைப் பயன்படுத்துவார்கள். இதை ஆய்வு செய் இந்தியாவின் டிஆர்டிஓ அதிகாரிகள் இந்த பாகிஸ்தான் நாட்டால் அணுசக்தி திட்டத்திற்குப் பயன்படுத்த முடியும் என்று சான்றளித்தது. இந்த கருவிகள் பாகிஸ்தானின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்திற்கான முக்கியமான பாகங்களைத் தயாரிக்கப் பயன்படும் எனத் தெரிகிறது.
எதற்கு பயன்படும்: கடந்த காலங்களில் வட கொரியாவும் கூட இந்த சிஎன்சி இயந்திரங்களைத் தனது அணுசக்தி திட்டத்தில் பயன்படுத்தி உள்ளது. துறைமுக அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்துள்ளனர். அதன் பிறகே கப்பலுக்குச் சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த கருவிகளை இப்போது இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இதுபோன்ற கருவிகளைப் பாகிஸ்தானால் நேரடியாக வாங்க முடியாது. இதனால் பாகிஸ்தான் சீனா மூலம் இந்த கருவிகளை வாங்கலாம் என சந்தேகிக்கின்றனர். மொத்தம் 22,180 கிலோ எடையுள்ள இந்த சரக்குகள் உள்ள அனுப்புநர் மற்றும் பெறுநர் குறித்த தகவல்களும் போலியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் ராணுவ பொருட்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பல முறை இந்திய அதிகாரிகள் இதுபோன்ற சரக்குகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். கடந்த 2022 மார்ச் மாதம் பாகிஸ்தானின் பாதுகாப்பு சப்ளையரான காஸ்மோஸ் இன்ஜினியரிங், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தெர்மோஎலக்ட்ரிக் கருவிகளை இதுபோல பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ராணுவ பயன்பாடு மட்டும் இல்லை: இது குறித்து இந்திய அதிகாரிகள் இப்போது அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் இந்த சிஎன்சி இயந்திரங்கள் ராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்த முடியும். எனவே, உண்மையில் எதற்காகப் பாகிஸ்தானுக்கு இது செல்கிறது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் இருந்தது அணு ஆயுத கருவிகள் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், "பாக்கிஸ்தானில் சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் தனக்கு தேவையான லேத் இயந்திரங்களை இறக்குமதி செய்யும் எளிய நிகழ்வு. அந்த கருவிகளிலேயே இது எதற்காக என தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் கூட முறையாக இருக்கிறது.
இப்படி இருக்கும் போது வணிகப் பொருட்களைப் பறிமுதல் செய்த இந்தியாவின் போக்கை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்ததை தடை செய்கிறது. இது சர்வதேச விதிமுறைகளை மீறிய செயலாகும்" என்று கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications