"எனக்கு நிஜமாகவே புரியவில்லை.." புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து.. சரத் பவார் சொல்வதை கேளுங்களேன்
மும்பை: அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்தும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் மறைமுகமாகச் சாடினார்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். கடந்த 2019இல் இந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கொரோனா காலத்திலும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் படுவேகமாக நடைபெற்றது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இந்தக் கட்டிடம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
சரத் பவார்: இருப்பினும், இந்த கட்டிடத்தைக் குடியரசுத் தலைவரே திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறிய கூறிய பல எதிர்க்கட்சிகள் இந்தத் திறப்பு விழாவைப் புறக்கணித்திருந்தனர். இதற்கிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து என்சிபி கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள மகாத்மா காந்தி மிஷன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடாளுமன்றம் தொடர்பான நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தை முக்கியம் என்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது..
புரியவில்லை: கடந்த காலங்களிலும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளனர். ஆனால், அப்போது அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இப்போது நமக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்குத் தேவை என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை. இது குறித்த முடிவை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் எடுத்திருக்கலாம். ஆனால் புதிய கட்டிடம் குறித்து செய்தித்தாள்கள் மூலமே நான் தெரிந்து கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், யாரையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல், "அரசில் இருப்பவர்களில் முக்கிய நபர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் முறையாகக் கலந்து கொள்வதில்லை. அரசின் தலைவர் எப்போதாவது நாடாளுமன்றத்திற்கு வந்தால், அந்த நாளே வித்தியாசமாக இருக்கும். அனைத்தையும் விட நாடாளுமன்றம் மேலானது. அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், அது குறித்த மக்களின் எண்ணமே பாதிக்கப்படுகிறது.
நான் ஒரு சிறிய அரசியல் கட்சியின் தலைவர் தான்.. ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியினர் அனைவரும் சேர்ந்து ஒன்றை வலியுறுத்தினோம். அதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை அழைக்க வேண்டும் என எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றாகக் கோரிக்கை வைத்தோம்.. இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.
நமது நாட்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடருக்குப் பிறகு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் நேரு உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் சேர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டார்கள். அதெல்லாம் வரலாற்று நிகழ்வு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் முதலில் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் முதல் படம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் படமாக இருக்கவில்லை.. மாறாகக் காவி உடை அணிந்தவர்களுடன் எடுக்கப்பட்ட படம் தான் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications