மகாராஷ்டிரா: சொந்த சித்தப்பாவுக்கே துரோகம் செய்ய அஜித்பவாரை துணிய வைத்தது எது?
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாள் இரவில் நடந்த அத்தனை மாற்றத்துக்கும் ஒரே ஒருவர்தான் காரணம் என்கிறார்கள். அவர்தான் அஜித்பவார். அவர் எப்படி ஏன் இது போன்ற காரியத்தை செய்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத அளவிற்கான திடீர் திருப்பம் நேற்றைய தினம் ஏற்பட்டது. அதாவது அஜித் பவார் பாஜகவினருடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உதவியது. மேலும் துணை முதல்வராக அவர் பதவியேற்றுக் கொண்டது. இதில் என்ன சிறப்பம்சம் என்றால், தனது சித்தப்பா சரத்பவாருக்கும் தெரியாமல் அவர் தன்னிடம் கொடுத்திருந்த என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொண்டு போய் ஆளுநரிடம் கொடுத்துவிட்டார்.
இவர் இவ்வாறு செய்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறை
அஜித் பவார் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த போது அவர் 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த சில நாட்களுக்கு முன்பே அமலாக்கத் துறை சரத்பவாரின் பெயரையும் இந்த வழக்கில் சேர்த்தது.

பரபரப்பு
இந்த நிலையில் நேரில் ஆஜராக உள்ளதாக சரத்பவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த சமயம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பையில் முகாமிட்டிருந்தனர். அஜித் பவார் மட்டும் மும்பைக்கு வரவில்லை. சரத்பவாருக்கு தெரியாமலேயே எம்எல்ஏ பதவியை அஜித் ராஜினாமா செய்தார்.

பார்த் குமார்
இந்த நிலையில் அஜித் பவாரின் மகன் பார்த் குமாருக்கு நீண்ட இழுபறிக்கு பிறகே நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வழங்கினார் சரத் பவார். இது அஜித் பவாரை கோபப்படுத்தியது. மேலும் சரத்பவாரின் அரசியல் வாரிசாகவே அஜித் பவார் கருதப்பட்டிருந்த நிலையில் 2009-ஆம் ஆண்டு முதல் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே அரசியலுக்குள் நுழைந்தார்.

சுப்ரியா சுலே
அப்போதிலிருந்து அஜித் பவாரின் முக்கியத்துவம் குறைந்ததாக தெரிகிறது. மேலும் எல்லா முடிவுகளையும் சுலே எடுத்தார். இதனால் அண்ணன்- தங்கை இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதையடுத்து அஜித் பவார் தான் ஓரங்கப்பட்டப்பட்டதாகவே கருதினார். இதெல்லாம் சேர்ந்தே அஜித் பவாரை அத்தகைய முடிவை எடுக்க வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அமலாக்கத் துறை வழக்கு குறித்தும் அஜித் பவார் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம். வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக யாரேனும் உறுதிமொழி கொடுத்திருக்கலாம் என்றெல்லாம் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications