ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு மனைவி கொலை.. குழந்தைகளுடன் எஸ்கேப் ஆன கணவன்: நெஞ்சை உறையவைக்கும் வீடியோ
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை எழுப்பி ஓடும் ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள வசாய் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள்தான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திடீர் வாக்குவாதம்
மகராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள வசாய் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகள் பலர் தூங்கிக்கொண்டு இருந்தனர். இதில், ரயில் நிலையத்தின் நடைமேடையில் உள்ள ஒரு இருக்கையில் பெண் ஒருவர் தூங்கி கொண்டு இருக்கிறார். அப்போது பெண்ணின் அருகில் வரும் அப்பெண்ணின் கணவர் எழுப்புகிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

துடிதுடித்து சாவு
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றுகிறது. இதனால் ஆக்ரோஷமாக இருவரும் சண்டையிடும் போது அந்த வழியாக அவாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருக்கிறது. அப்போது நொடிப்பொழுதில் தனது மனைவியை ஓடும் ரயில் முன்னே தள்ளிவிடுகிறார். உடனே, அங்கிருந்த தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார். ரயில் ஏறி இறங்கியதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அப்பெண் இறந்து விடுகிறார். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

தப்பி ஓடியவர் கைது
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு விட்டு ஓடிய நபரை வலைவீசி தேடினர். இதில் அந்த நபர் போலீசிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் முதலில் தாதர் சென்று அங்கிருந்து தானே மாவட்டம் கல்யாண் நகருக்கு சென்றுள்ளர். பின்னர் அங்கிருந்து பிவண்டி நகரில் பதுங்கியிருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திட்டமிட்டு கொலை செய்தாரா?
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து மேற்கு ரயில்வே துணை காவல் ஆணையர் சந்தீப் பஜ்பாக்ரே கூறியதாவது:- தம்பதியினர் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே ரயில்வே நடைமேடையில் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை நேரத்தில் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் மனைவி என்றும் பாராமல் அவரை தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். பின்னர் குழந்தைகள் இருவரையும் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். திடீரென ஏற்பட்ட சண்டையின் காரணமாக கொன்றாரா? அல்லது வேண்டும் என்றே திட்டமிட்டு கொலை செய்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications