"மதம் மாறலைன்னா வேலையை விட்டு தூக்கிடுவோம்.." விப்ரோவில் பெண் ஐடி ஊழியருக்கு மிரட்டல்! என்ன நடந்தது
புனே: விப்ரோவின் புனே வளாகத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், தனது சக ஊழியர் தன்னை மத ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.. இதனால் அவர் வேலையை விட்டு விலக வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முன்னாள் சக ஊழியர் மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டாய மத மாற்ற முயற்சி நடந்ததாகப் புகார் எழுந்தது. நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பாலியல் தொல்லை மற்றும் கட்டாய மத மாற்ற முயற்சி நடந்தாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து டிசிஎஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

விப்ரோ
இதற்கிடையே இப்போது புனேவில் உள்ள விப்ரோ வளாகத்திலும் இதேபோன்ற ஒரு புகார் எழுந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய அந்த பெண், மதம் சார்ந்த துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி காரணமாகத் தனது பணியைத் துறந்துள்ள விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 முதல் 2025 வரை விப்ரோவின் புனே ஹிஞ்சவாடி வளாகத்தில் பணியாற்றிய அந்தப் பெண், சக ஊழியர்கள் ஒருவர் தன்னை தொடர்ந்து மத ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மதமாற்றப் புகார்
தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படியும், அந்த மதத்தின் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும்படியும் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் தொடர் உளவியல் அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அந்தப் பெண் இதை எதிர்த்தபோது, பணியிடத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட டார்ச்சர்கள் அதிகரித்துள்ளன. "உன் பெர்ஃபார்மன்ஸ் சரி இல்லை, வேலையை விட்டுத் தூக்கிடுவோம்" என்று மேலாளர்கள் மிரட்டியதாக அவர் தெரிவிக்கிறார். மன அழுத்தமும், மத ரீதியான துன்புறுத்தலும் தாங்க முடியாமல், கடைசியில் வேலையே வேண்டாம் என்று வெளியேறியிருக்கிறார் அந்தப் பெண்.
புகார்
நிறுவனத்தின் உள்ள விசாரணை மையம் இதில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்தே அந்த பெண், காவல்துறை மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கதவைத் தட்டியிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். இந்த விவகாரம் குறித்துப் பேசிய புனே போலீஸ் அதிகாரி பாலாஜி பந்தரே, "புகார்தாரர் ஒரு புராஜெக்ட் மேனேஜர். காப்பீடு தொடர்பான பணியில் இருந்த சக பெண் ஊழியர் ஒருவர், இவரை மத ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதாகப் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் இப்போது பெங்களூரில் வசித்து வருவதால், அவரிடமும் விசாரணை நடத்தப்படும். விப்ரோ நிறுவனம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தது என்பதையும் விசாரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விப்ரோ நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "ஊழியர்களின் கண்ணியம் மற்றும் மரியாதைதான் எங்களுடைய முன்னுரிமை. எந்த விதமான பாரபட்சமோ, துன்புறுத்தலோ இங்கே அனுமதிக்கப்படாது. புனே காவல்துறையின் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வழங்கிவிட்டோம். விசாரணை நடந்து கொண்டிருப்பதால், இப்போதைக்கு நாங்கள் இதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.
டிசிஎஸ் விவகாரம்
இந்த சம்பவம் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. முன்னதாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் நாசிக் பிரிவில் கட்டாய மதமாற்ற முயற்சிகள் நடந்ததாக விசாரணை காட்டியது. அப்போது பல பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சக ஊழியர்களுக்கு எதிராகத் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்களுடன் முன்வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் வேலையை விட்டும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications