மானம் போச்சு..என் கல்யாணமும் நின்னு போச்சு! நடிகர் சையிப் அலிகானை குத்தியதாக தவறுதலாக கைதானவர் வேதனை
மும்பை: நடிகர் சையிப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தவறுதலாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கணேஜியா, மும்பை போலீசார் தனது வாழ்க்கையை தலைகீழாக மாறிவிட்டதாக வேதனை பொங்க தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சிகளில் தனது புகைப்படங்கள் வெளியானதால், வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று விட்டதாக பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
நடிகை கரீனா கபூரின் கணவரும் நடிகருமான சைஃப் அலிகான் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அவரது பெயர் தலைப்பு செய்திகளில் அடிபட்டு வருகிறது.

அதற்கு காரணம் அவரது வீட்டில் வைத்தே அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான். கடந்த 16ஆம் தேதி சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.
படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடலில் ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் முதுகு தண்டிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 5 நாள் சிகிச்சைக்கு பிறகு 21ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான். இந்த நிலையில் அவரை கத்தியால் குத்தியதாக முஹம்மது இஸ்லாம் என்ற நபரை 18ஆம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கைதான முகமது இஸ்லாமின் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த பதினெட்டாம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனேஜியா என்பவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மும்பை போலீசார் கைது செய்தனர். அதாவது சைஃப் அலிகானின் வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமது போலவே இருந்ததால் ஆகாஷ் கைலாஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மும்பை காவல்துறையின் தவறுதலான நடவடிக்கையால் தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை பொங்க தெரிவித்திருக்கிறார் ஆகாஷ்.
சைஃப் அலி கானை தான் கத்தியில் குத்தியதாக தொலைக்காட்சிகளில் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். மேலும் எனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நின்று விட்டது. பெண் வீட்டாரிடம் எனது குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் திருமணத்திற்கு மறுத்து விட்டனர். வேலையும் போய் விட்டது. திருமணமும் நடக்கவில்லை. எனக்கு எதிர் காலத்தில் திருமணம் நடக்குமா என்பதும் தெரியவில்லை. இதனால் சையிப் அலிகான் வீட்டு முன்பு நின்று நீதி கேட்க போகிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications