லண்டனுக்கு பறக்க முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள்.. விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
மும்பை: இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷ்னி கபூர் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் ஏறுவதை தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
Recommended Video
ஏற்கனவே ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் யெஸ் வங்கி நிறுவனர் ராணாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
அத்துடன் ராணா கபூர் மற்றும் அவரது மற்ற குடும்பனர்களுக்கு எதிராக யெஸ் வங்க நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதன் மூலம் யெஸ் வங்கி நிறுவனர் ராணாவின் மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது.
2000 கோடி முதலீடு
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிளில் ஒன்றான யெஸ் வங்கி கடன் கொடுக்க தகுதியில்லாதவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. இந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் வாராக்கடன் மதிப்பை குறைத்து காண்பித்தாக முதலில் குற்றச்சாட்டு எழுந்தது.அத்துடன் அவர் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அதற்கு கடன் கொடுத்து சட்டவிரோத பணத்தை முதலீடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராணா கபூர் 2000 கோடி ரூபாயை லண்டனில் முதலீடு செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது,
அமலாக்கத்துறை அதிரடி
இதெல்லாம் ராணா கபூரை கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்த பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை காவலில் எடுத்து முழுவிசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டது. இதன்படி அவரை நேற்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
கடன் வழங்கி முறைகேடு
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ .3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை யெஸ் வங்கி வாங்கியது. இதற்காக ராணா கபூரின் மூன்று மகள்களில் ஒருவரான ரோஷ்னி கபூருக்கு சொந்தமான டொயிட் என்ற நிறுவனத்திற்கு ரூ .600 கோடியை திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கடனை வழங்கியது. ராணாவிடம் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 4300 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ராணா கபூர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்றார்.
பொதுமக்கள் கோபம்
அப்போது குறுக்கிட்ட ராணாவின் வழக்கறிஞர்ஜெய்ன் ஷ்ராஃப், நீதிமன்றத்தில் வாதிடுகையில், ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வங்கியை தற்காலிகமாக நிறுத்தி, திரும்பப் பெறுவதற்கு ரூ .50,000 வரம்பை விதித்த பின்னர், யெஸ் வங்கிக்கு எதிரான பொதுமக்கள் சீற்றம் காரணமாக தனது கட்சிக்காரர் ராணாவை "பலிகடாவாக" மாற்ற பார்க்கிறார்கள் என்றார். இதையடுத்து விவாதங்களுக்கு பின்னர் மும்பை சிறப்பு நீதிமன்றம் ராணா கபூரை மார்ச் 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
நம்பிக்கை அளித்த அறிவிப்பு
இதனிடையே கடுமையான நிதி நெருக்கடி காரணமாக யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது, மேலும் மறுமலர்ச்சி திட்டத்தை உருவாக்கமுயன்று வருகிறது. சிக்கலான கடன் வழங்குபவருக்கான மீட்பு ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக யெஸ் வங்கியில் 49 சதவீத பங்குகளை வாங்க நிதி முதலீடு செய்யப்போவதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதனால் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. தற்போது உள்ள கட்டுப்பாடுகள் விரைவில் சரியாகும் என தெரிகிறது.முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.