கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி
நாகை: சர்வாதிகாரியான மோடியின் ஆட்சியும், உதவாக்கரையான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் அகற்றப்படவேண்டும். வலங்கைமானில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசினார்.
நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து வலங்கைமானில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், மத்தியில் ஆளும் சர்வாதிகாரி மோடியின் ஆட்சியும் , மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஹெலிகாப்டர்
பிரச்சாரத்தின்போது வார்த்தைக்கு வார்த்தை நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தவித்த போது உடனடியாக ஓடோடி வராமல் ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டரில் இருந்தவாறே பார்த்துவிட்டு சென்றார்.

நிறைவேற்ற திட்டம்
புயல் பாதித்த பகுதிகளை புயலடித்த மறுநாளே வந்து பார்த்தவன் நான்தான். விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் ரத்துபோன்றவை மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

செம்மொழி தகுதி
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் திமுகவின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழுக்கு செம்மொழி தகுதியை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி.

வேளாண் மண்டலம்
அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா சமாதிக்கு அருகில் இடம்தர மறுத்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. காவிரி டெல்டா பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது , மின் கோபுரங்கள் அமைக்க கூடாது, என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

பிரசாரம்
மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதற்கு பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். வலங்கைமானை தொடர்ந்து குடவாசல், கூத்தாநல்லூர் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications