தமிழகத்தில் தொடர் கதையாகும் ”ஜெய்பீம்” கொடூரங்கள்... சென்னையை தொடர்ந்து நாகையில் ஒரு லாக்அப் மரணம்
நாகப்பட்டினம்: கொத்தமங்கலத்தில் விசாரணைக் கைதியாக இருந்த சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே அமைந்து உள்ளது கொத்தமங்கலம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் அந்த பெண் திட்டச்சேரி காவல் நிலையத்தில் சிவசுப்பிரமணியன் மீது புகார் அளித்து இருக்கிறார். வழக்குப்பதிவு செய்த திட்டச்சேரி போலீசார் சிவசுப்பிரமணியனை கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.
அங்கு சிவசிப்பிரமணியனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் சிவசுப்பிரமணியன் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி சிவசுப்பிரமணியனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி சிறை காவலர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். இதுகுறித்து நாகை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வழங்கிய புகாரின் அடிப்படையில் வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications