நபிகள் நாயகத்தின் வரலாறை படிங்க.. முழு மனிதனாகலாம்! பாஜகவினருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அட்வைஸ்
நாகப்பட்டினம்: நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றை படித்தால் முழு மனிதர்களாக மாறலாம் என பாஜகவினருக்கு தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அரபு நாடுகள் தலையிடக்கூடாது.. மோடிஜி ஆட்சிலதான் முஸ்லிம்கள் பாதுகாப்பா இருக்காங்க! -வேலூர் இப்ராஹிம்
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, "நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பதிவு செய்வோம்." என்றார்.
கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.
அரபு நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, அமீரகம், குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கருத்து
இந்த நிலையில் நாகூர் தர்காவுக்கு சென்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "பெரியார், அம்பேத்கர், காமராசர், கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாறை படித்தவர்கள். நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றை படித்தால் முழு மனிதர்களாக மாறுவார்கள். மீண்டும் நபிகள் நாயகம் குறித்து விமர்சனம் செய்தால் பெரியார், அண்ணா வழியில் எதிர்ப்போம்." என்றார்.