நாகை அரசு பள்ளியில் அப்படியே சுருண்டு விழுந்த கன்னியாகுமரி ஆசிரியர்.. கண்ணீரில் மாணவர்கள்
நாகப்பட்டினம்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த குமார் என்பவர் தலைஞாயிறில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் குமார் தான் பணிபுரிந்து வந்த பள்ளிக்கு பணிக்காக வந்தார். மதியம் 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த குமார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிர் பிரிந்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் 57 வயதாகும் குமார் என்பவர் நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள வாட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இதனால் அவர் தலைஞாயிறில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஆசிரியர் குமார் தான் பணிபுரிந்து வந்த பள்ளிக்கு பணிக்காக வந்தார். மதியம் 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே சுருண்டு விழுந்தார். இதை பார்த்த சக ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஆசிரியர் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைஞாயிறு போலீசார், ஆசிரியர் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications