கலவரத்தில் முடிந்த காதல்..ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. 4 பேர் சரண்.. பகீர் வாக்குமூலம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதல் விவகாரம் ஒன்றில், விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரணடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன். இவருக்கு வயது 40. கூலித்தொழிலாளியான இவர், இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய துணைச்செயலாளராக இருந்தவர்.
கடந்த 5ம்தேதி பைக்கில் வந்து கொண்டிருந்த புஷ்பாகரனை, அதே பகுதியை சேர்ந்த சில மர்மநபர்கள் 2 பைக்குகளில் பின்னாடியே துரத்தி கொண்டு வந்தனர். அவர்கள் கையில், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தனர்.
மூக்காண்டி தூங்குகிறார் என்றே அத்தனை பேரும் நினைத்தனர்.. அருகில் போய்ப் பார்த்தால்.. பரிதாபம்!
கும்பல்
ஒரு கட்டத்தில் சிடிஎம்.புரம் பகுதியில் வந்தபோது புஷ்பாகரனை பைக்கில் அந்த கும்பல் வழிமறித்து நிறுத்தியது. இதனால் அதிர்ந்து போன புஷ்பாகரன் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு, உயிரை காப்பாற்றி கொள்ள தலைதெறிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பலும் பின்னாடியே ஓடி, விரட்டி விரட்டி வெட்டியது.
முட்டுசந்து
கடைசியில் ஒரு முட்டு சந்துக்குள் சிக்கி கொண்ட புஷ்பாகரனால் அங்கிருந்து தப்ப முடியவில்லை. அதனால் மர்மகும்பல், மீண்டும் அரிவாளால் புஷ்பாகரனை சுற்றி வளைத்து வெட்டியது. இதில்ல புஷ்பாகரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல், தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களையும் அங்கேயே போட்டுவிட்டு சாவகாசமாக நடந்து சென்றது. ஆனால் இந்த படுகொலை சம்பவம் பெரிய பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.
கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கிஷோர், மாதேஷ் கண்ணா, சஞ்சய்குமார், சஜன் ஆல்பர்ட் ஆகியோர் போலீசில் சரண் அடைந்துள்ளனர். இது சம்பந்தமாக கைதான கிஷோர் சொன்னதாவது:
பழிக்கு பழி
"நான் புஷ்பாகரனின் உறவுக்கார பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். ஆனால் இந்த விஷயம் புஷ்பாகரனுக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவரும், அவரது அண்ணனும் போலீசில் என் மீது புகார் செய்யவும், நான் கைது செய்யப்பட்டேன். இந்த ஆத்திரத்தில் புஷ்பாகரனை பழிவாங்க முடிவு செய்து, பேச்சுவார்த்தைக்கு தனியாக வரும்படி செய்தேன்.
வாக்குமூலம்
அதன்படியே வந்த புஷ்பாகரனை, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தேன்" என்று கூறினார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் கிஷோரின் அண்ணன் பிரசன்னாவை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்